ராகுலை பிரதமராக்கவே ஆந்திராவை பிரிக்கிறார் சோனியா: சந்திரபாபு நாயுடு குற்றச்சாட்டு
திருப்பதி: தனது மகன் ராகுல் காந்தியை பிரதமராக்கவே ஆந்திராவைப் பிரிக்கிறார் என காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியைத் தாக்கிப் பேசியுள்ளார் தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு.
ஆந்திராவில் புயலால் பாதிக்கப் பட்ட விவசாய நிலங்களை நேரில் பார்வையிட்டு, சேதார விவரங்களை விவசாயிகளிடம் கேட்டு வருகிறார் தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு.
இந்நிலையில், நிருபர்களை சந்தித்த அவர் கூறியதாவது, ''மத்திய அரசு ஏற்படுத்தியுள்ளது, மாநில பிரிவினை சட்டத்துக்கு எதிரானது. இதற்கு சோனியா காந்திதான் காரணம். சோனியா காந்தி, தனது மகன் ராகுல் காந்தியை பிரதமராக்க நினைக்கிறார். அதற்கு வசதியாக ஆந்திராவை 2 ஆக பிரித்துள்ளனர்.
தெலுங்கானாவில் சந்திரசேகர் ராவுடனும், சீமாந்திராவில் ஜெகன் மோகன் ரெட்டியுடனும் ரகசிய உடன்பாடு ஏற்படுத்தி கொண்டு, கூட்டணி அமைத்து அதிக எம்.பி. தொகுதிகளை கைப்பற்ற நினைக்கிறார். மாநில பிரிவினைக்கு முழு காரணமும் சோனியா காந்திதான்.
ஆந்திராவில் இயற்கை சீற்றங்களால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள், காங்கிரஸ் அரசின் இயலாமையை காட்டுகிறது. புயல் கடுமையான சேதத்தை ஆந்திர மாநிலத்தில் ஏற்படுத்தியும் அதை முதல்வர் கிரண்குமார் ரெட்டி கண்டுகொள்ளாமல் இருக்கிறார். புயலால் பாதிக்கப்பட்ட இடங்களை பார்வையிட கூட அவருக்கு நேரம் இல்லை.
நாங்கள் ஆட்சிக்கு வந்தால் விவசாயிகளுக்கு வழங்கப்பட்ட கடன்களை தள்ளுபடி செய்வோம். மதுபானக்கடைகளை மூடுவோம்" எனத் தெரிவித்துள்ளார்.