உயிர் பயத்தை போக்குங்கள்: தமிழக முதல்வருக்கு உம்மன் சாண்டி கடிதம்!
திருவனந்தபுரம்: முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை குறைக்கவேண்டும் என்று தமிழக முதல்வர் ஓ. பன்னீர்செல்வத்துக்கு கேரள முதல்வர் உம்மன் சாண்டி கடிதம் எழுதி உள்ளார்.
முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் 141 அடியை எட்டியதைத் தொடர்ந்து நேற்று மாலை இடுக்கி மாவட்டத்துக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டு உள்ளது. இது தொடர்பாக, தமிழக முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வத்துக்கு, கேரள முதல்வர் உம்மன் சாண்டி எழுதியுள்ள கடிதம்:
நமது இரு மாநில அரசுகளுக்கும் இடையே அணையின் பாதுகாப்பு தொடர்பாக மாறுபட்ட கருத்துகள் இருப்பது உண்மைதான்.
ஆனாலும், அணையில் நீர் மட்டம் உயர்ந்துள்ள தற்போதைய நிலையில், முல்லைப் பெரியாறு அணைப் பகுதியின் கீழாக வசிப்பவர்களின் உயிர் பயத்தை போக்கும் விதமாக தங்களது தரப்பில் இருந்து விவேகமான நடவடிக்கை தேவைப்படுகிறது.
கடந்த 2 வாரங்களில் முல்லைப் பெரியாறு அணையின் நீர் மட்டம் 136 அடியில் இருந்து 139.50 அடியாக உயர்ந்து விட்டது. இதற்கு முக்கிய காரணம், வைகை நீர்தேக்கத்தில் அதன் கொள்ளளவான 3 டி.எம்.சி. அளவிற்கு நீரை தேக்கி வைப்பதற்கு பதிலாக கடுமையாக குறைத்துக் கொண்டதுதான்.
அதனால், முந்தைய ஆண்டுகளைப் போலவே, வைகை நீர் தேக்கத்திற்கு கூடுதல் தண்ணீரை திருப்பிவிடுவதன் மூலம் முல்லைப் பெரியாறு அணையின் நீர் மட்டத்தை குறைக்க இயலும். எனவே, இடுக்கி மாவட்ட மக்களின் பாதுகாப்பு கருதி முல்லைப் பெரியாறின் நீர் மட்டத்தை குறைத்திட வேண்டுகிறேன்.
இவ்வாறு உம்மன் சாண்டி அக்கடிதத்தில் வேண்டுகோள் விடுத்துள்ளார்.