சொராபுதீன் போலி என்கவுண்ட்டர் வழக்கு: குஜராத் பெண் போலீஸ் அதிகாரி மீதான குற்றச்சாட்டும் ரத்து!
மும்பை: சொராபுதீன் சேக், துளசிராம் பிரஜாபதி ஆகியோரை போலி என்கவுண்ட்டர் மூலம் படுகொலை செய்த வழக்கில் இருந்து குஜராத் காவல்துறை கூடுதல் டி.ஜி.பி. கீதா ஜோஹாரி மீதான குற்றச்சாட்டுகளை மும்பை சி.பி.ஐ. சிறப்பு நீதி மன்றம் கைவிடுவதாக அறிவித்துள்ளது.
கடந்த 2005ம் ஆண்டு நவம்பர் மாதம் குஜராத் தீவிரவாதத் தடுப்பு போலீசாரால் சொராபுதீன் சேக் மற்றும் அவரது மனைவி கெளசர் பீ ஆகியோர் கடத்தப்பட்டு போலி எண்கவுண்ட்டரில் கொலை செய்யப்பட்டதாக சி.பி.ஐ. குற்றம் சாட்டியிருந்தது. ஆனால் சொராபுதீன் பாகிஸ்தான் தீவிரவாத அமைப்பான லஷ்கர் இ தொய்பாவுடன் தொடர்புடையவர் என்றும், குஜராத்தின் பல முக்கிய தலைவர்களைக் கொலை செய்ய அவர் திட்டமிட்டிருந்ததாகவும் குஜராத் போலீசார் குற்றம் சாட்டியிருந்தனர்.
2006ம் ஆண்டில் இந்த வழக்கில் முக்கிய சாட்சியான துள்சிராம் பிரஜாபதி குஜராத் போலீசாரால் எண்கவுண்ட்டரில் கொல்லப்பட்டார். இந்த 3 கொலைகளிலும் குஜராத் உள்துறை அமைச்சராக இருந்த அமித் ஷாவுக்கு தொடர்பு இருந்ததாக சி.பி.ஐ. வழக்குப் பதிவு செய்தது. இதையடுத்து 2010ம் ஆண்டில் அவரை சிபிஐ கைது செய்தது. ஆனால், 3 மாதத்தில் அமித்ஷா ஜாமீனில் வெளியே வந்தார்.
இந்த வழக்கை விசாரித்த சி.பி.ஐ. மும்பை சிறப்பு நீதிமன்றத்தில் அமித்ஷா மீது குற்றப்பத்திரிகையையும் தாக்கல் செய்யப்பட்டது. மொத்தம் 38 பேர் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்ட வழக்கில் அண்மையில் அமித்ஷா வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டார்.
இதேபோல் ராஜஸ்தான் உள்துறை அமைச்சர் குலாப்சந்த் கட்டாரியா, ராஜஸ்தானைச் சேர்ந்த வர்த்தகர் விமல் பட்னி, குஜராத் மாநில காவல்துறை முன்னாள் தலைவர் பி.சி. பாண்டே ஆகியோரையும் நீதிமன்றம் விடுவித்திருந்தது.
இந்நிலையில் மற்றொரு குஜராத் காவல்துறை அதிகாரியான கீதா ஜோஹரிக்கு எதிரான குற்றச்சாட்டுகளையும் கைவிடுவதாக நேற்று சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்ற நீதிபதி கோசாவி தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பான வழக்கு மும்பையில் உள்ள சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது சி.பி.ஐ. வழக்கறிஞர் சச்சின் பவார் ஆஜராகி வாதிடுகையில், ஜோஹரிக்கு எதிராக வழக்குத் தொடுக்க மகாராஷ்டிர அரசின் அனுமதி பெறப்படவில்லை. ஆகையால் அவருக்கு எதிராக வழக்குத் தொடுக்க முடியாது. எனவே எங்களது வழக்கை திரும்ப பெறுவதற்கான மனுவை தாக்கல் செய்கிறோம் எனக் கூறினார். இதையடுத்து கீதா ஜோஹரிக்கு எதிராக குற்றச்சாட்டுகள் கைவிடப்படுவதாக நீதிபதி அறிவித்தார்.