நக்சல்களை ஒடுக்குவதில் சத்தீஸ்கர் பாஜக அரசு முழு தோல்வி: பிரதமர் மன்மோகன்சிங்
ராய்ப்பூர்: நக்சல்களை ஒடுக்குவதில் சத்தீஸ்கர் மாநிலத்தை ஆளும் பாரதிய ஜனதா கட்சி அரசு முழுமையாக தோல்வி அடைந்துவிட்டது என்று பிரதமர் மன்மோகன்சிங் குற்றம்சாட்டியுள்ளார்.
ராய்ப்பூரில் நடைபெற்ற தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் பிரதமர் மன்மோகன்சிங் பேசியதாவது:
சில பாரதிய ஜனதா கட்சித் தலைவர்கள் நாட்டின் வரலாறு, புவியியலை மாற்றிக் கொண்டிருக்கிறார்கள். அவர்களால் பேசத்தான் முடியுமே தவிர அதிகாரத்துக்கு வரவே முடியாது.
கடந்த 5 ஆண்டுகாலத்தில் வறுமையை 3 மடங்கு குறைத்திருக்கிறோம். இதே சத்தீஸ்கர் மாநிலத்தில் அதிகளவில் பொதுவிநியோகத் திட்டம் செயல்படுத்துவதற்கு காரணம் மத்திய அரசு நிதிதான்.
கொச்சை மொழி
நாங்களும் எதிர்க்கட்சிகளை விமர்சிக்கிறோம். ஆனால் கொச்சை மொழிகளை பேசி தனிநபரின் பெயருக்கு களங்கம் விளைவிப்பது இல்லை.
நிதியை பயன்படுத்தாத அரசு
நக்சல்களை ஒடுக்குவதற்காக பெருந்தொகையான நிதி சத்தீஸ்கர் மாநில அரசுக்கு மத்திய அரசு வழங்கியுள்ளது. ஆனால் அந்த நிதியை முறையாக பாரதிய ஜனதா அரசு பயன்படுத்தவில்லை.
பாஜக தவறிவிட்டது
சத்தீஸ்கரை வளப்படுத்த பாரதிய ஜனதா அரசு தவறிவிட்டது. காங்கிரஸ் தலைவர்கள் மீது மாவோயிஸ்டுகள் தாக்குதல் நடத்தினர். அதற்கு காரணம் மாநில அரசு பாதுகாப்பை சரியாக பேணவில்லை.
நக்சல்களிடம் பணியமாட்டோம்
காங்கிரஸ் தலைவர்கள் மீது தாக்குதல் நடத்தினாலும் நக்சல்களிடம் பணிந்துபோகமாட்டோம். சத்தீஸ்கர் மாநிலத்தை காங்கிரஸ் கட்சி நிச்சயம் வளப்படுத்தும்.
மதவாத சக்தி பாஜக
பாரதிய ஜனதா கட்சி ஒரு மதவாத சக்தி. மதச்சார்பின்மையை பற்றி பேசி இந்த நாட்டு மக்களை முட்டாளாக்கிக் கொண்டிருக்கிறது. காங்கிரஸ் கட்சியால் மட்டுமே நாட்டின் வளர்ச்சி சாத்தியம் என்றார்.