காங்கிரஸில் கலகக் குரல்.. ப.சிதம்பரம் மீது பரத்வாஜ், சுதர்சன நாச்சியப்பன் பாய்ச்சல்!!
டெல்லி: ஸ்பெக்ட்ரம் வழக்கில் பிரதமர் மன்மோகன்சிங் மீது குற்றம்சாட்டிய முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரத்தை காங்கிரஸ் மூத்த தலைவர்களான ஹெச்.ஆர். பரத்வாஜ், சுதர்சன நாச்சியப்பன் ஆகியோர் மிகக் கடுமையாக சாடியுள்ளார்.
லோக்சபா தேர்தல் தோல்விக்குப் பின்னர் காங்கிரஸில் மேலிடத்துக்கு எதிரான விமர்சனங்கள் தொடர்கின்றன. இதில் முன்னாள் அமைச்சர் ப. சிதம்பரம் தொடர்ந்து காங்கிரஸ் மேலிடத்தை விமர்சித்து வருகிறார்.
காங்கிரஸ் கட்சிக்கு நேரு குடும்பத்தைச் சேராத ஒருவர்தான் தலைவராக வேண்டும் என்று சிதம்பரம் கருத்து தெரிவிக்க இதற்கு கடும் கண்டனங்கள் வந்து விழுந்தன.
இதனைத் தொடர்ந்து ஸ்பெக்ட்ரம் ஊழல் விவகாரம் அம்பலமான போதே, பிரதமராக இருந்த மன்மோகன்சிங் ராஜினாமா செய்திருக்க வேண்டும்; ஸ்பெக்ட்ரம் உரிமங்களை ரத்து செய்திருக்க வேண்டும் என்று அடுத்த விமர்சனத்தை முன்வைத்தார் சிதம்பரம்.
இதுவும் காங்கிரஸ் கட்சியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து கருத்து தெரிவித்துள்ள மூத்த காங்கிரஸ் தலைவர் ஹெச்.ஆர். பரத்வாஜ், தமிழகத்தைச் சேர்ந்த சிதம்பரம், திமுகவுக்கு ஆதரவாகக் கருத்தைக் கூறுகிறார்.
ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் சம்பந்தப்பட்ட அமைச்சர்கள் வெளிப்படையாக இயங்க வேண்டும் என்பதுதான் மன்மோகன்சிங்கின் நிலைப்பாடு. மன்மோகன்சிங்கிடம் உரிமங்களை ரத்து செய்யுமாறு சிதம்பரம் ஒருபோதும் சொல்லவே இல்லை. இதை நான் நன்கு அறிவேன் என்றார்.
மேலும் ராகுல் காந்தியின் தலைமைக்கு பதிலாக பிரியங்கா காந்தி அரசியலுக்கு வர வேண்டும் என்ற குரல் குறித்து கருத்து தெரிவித்த பரத்வாஜ், பிரியங்காவால்தான் காங்கிரஸை காப்பாற்ற முடியும். அவருக்கு கூடுதல் பொறுப்புகளை சோனியா காந்தி கொடுக்க வேண்டும் என்றார்,
சுதர்சன நாச்சியப்பன்
இதேபோல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மற்றொரு முன்னாள் மத்திய அமைச்சரான சுதர்சன நாச்சியப்பனும், ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் மன்மோகன்சிங்கை குறை கூறுவது சரியல்ல. ஸ்பெக்ட்ரம் விவகாரத்துக்கு சம்பந்தப்பட்ட அமைச்சர்களே பொறுப்பு என்று கூறியுள்ளார்.