சோக சம்பவம்.. பெற்றோர் இறந்தது தெரியாமல் அவர்களுடன் விளையாடிய 3 வயது சிறுவன்
ஹூப்பள்ளி: ரயில்வே பிளாட்பாரத்தில் பெற்றோர்கள் மர்மமான முறையில் இறந்து கிடப்பதை அறியாமல் அவர்களுடன் விளையாடிக் கொண்டிருந்த 3 வயது சிறுவனின் செயல் அனைவரது மனதையும் உருக்குவதாக இருந்தது.
கர்நாடக மாநிலம் கதக் மாவட்டத்தை சேர்ந்த தம்பதி ஈரன்ன தல்வார் மற்றும் மஞ்சுளா ஆகியோர் 3 வயது மகன் தேவராஜூடன் முனிராபாத்தில் உள்ள ஹூளிகம்மா கோயிலுக்கு சென்றுள்ளனர். அங்கு சாமி தரிசனம் முடித்து கொண்டு முனிராபாத் ரயில் நிலையத்துக்கு நள்ளிரவில் வந்துள்ளனர். அங்கு மகனுடன் படுத்து தூங்கியுள்ளனர். காலை வெகு நேரமாகியும் தல்வார் மற்றும் மஞ்சுளா கண்விழிக்கவே இல்லை.
ஆனால் 3 வயது சிறுவன் தேவராஜ் எழுந்துவிட்டான். பெற்றோர்கள் தூங்குவதாக நினைத்து கொண்ட சிறுவன் அங்குள்ள பிளாட்பாரத்தில் விளையாடிக்கொண்டிருந்தான். பின்னர் வெகு நேரம் ஆகியும் பெற்றோர்கள் கண் விழிக்காததை கண்டு சிறுவன் அழத்தொடங்கியுள்ளான்.
இதை பார்த்த ரயில்வே பயணிகள் சிலர் அவர்களின் அருகில் சென்று பார்த்தபோது, சிறுவனின் அம்மா, அப்பா இறந்திருந்தது தெரியவந்தது. உடனே ரயில்வே போலீஸாருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது.
போலீஸார் சிறுவனிடம் விசாரிக்கையில், சிறுவன், 'நாங்கள் கோயிலுக்குச் செல்வதற்காக வந்தோம். ஆனால் என் பெற்றோர்கள் இங்கு உறங்கிவிட்டனர். பலமுறை எழுப்பியும் இவர்கள் எழவில்லை' என கண்ணீருடன் கூறியுள்ளான்.
அந்தச் சிறுவனிடம் பெற்றோர் இறந்துவிட்டார் எனக் கூறமுடியாமல் ரயில்வே போலீஸாரும் பயணிகளும் சோகத்தில் ஆழ்ந்தனர். மேலும் சிறுவனை அவரது உறவினர்களிடம் அல்லது காப்பகத்தில் ஒப்படைக்கப் போவதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.