3வயது சிறுமி பலாத்காரம்: பெங்களூர் பள்ளி மீது கிரிமினல் வழக்கு பதிவு
பெங்களூர்: பெங்களூர் பள்ளியில் படிக்கும் 3 வயது எல்.கே.ஜி. மாணவி பள்ளி வளாகத்தில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக, அந்த பள்ளி மீது கிரிமினல் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. சந்தேகத்தின் பேரில் ஒரு ஊழியரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பெங்களூர் ஜாலஹள்ளியில் உள்ளது ஆர்ச்சிட் இன்டர்நேஷனல் பள்ளி. இப்பள்ளிக்கு பெங்களூரில் மட்டும் ஆறு கிளைகள் உள்ளன. இதேபோன்று நாட்டின் பல பகுதிகளிலும் கிளைகள் உள்ளன.
டாக்டர்கள் உறுதிசெய்தனர்
ஜாலஹள்ளியிலுள்ள பள்ளியில் நர்சரி படித்து வந்த 3 வயது மாணவி கடந்த செவ்வாய்க்கிழமை பள்ளி முடிந்து வீட்டுக்கு வந்ததில் இருந்து அழுது கொண்டே இருந்துள்ளார். மேலும் அவருக்கு காய்ச்சலும் அடித்துள்ளது. இதையடுத்து சிறுமியை பெற்றோர் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு சிறுமியை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாக தெரிவித்தனர்.
அங்கிள்
இதுகுறித்து, சிறுமியிடம் கேட்டதற்கு பள்ளியில் ஒரு அங்கிள் தான் தன்னை ஏதோ செய்ததாக தெரிவித்தார். இது குறித்து சிறுமியின் தந்தை ஜாலஹள்ளி போலீசில் புகார் அளித்தார். அவரது புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
ஒருவரிடம் விசாரணை
இந்நிலையில், பள்ளியின் அட்டென்டர் குண்டப்பா (45) என்பவரை சந்தேகத்தின்பேரில் போலீசார் பிடித்து விசாரித்து வருகின்றனர். பள்ளியில் ஆய்வு செய்த துவக்க கல்வித்துறை அதிகாரிகள், அந்த பள்ளியில் விதிமுறைகளை மீறியிருப்பதை கண்டுபிடித்துள்ளனர்.
விதிமுறை மீறல்
எல்கேஜி முதல் ஐந்தாம் வகுப்பு வரை கன்னட மீடியத்தில் கல்வி கற்றுக்கொடுப்பதாக அனுமதி வாங்கிய இந்த பள்ளியில், 7ம் வகுப்பு வரை கல்வி கற்றுக் கொடுக்கப்பட்டதும், நர்சரி நடத்துவதற்கும் அனுமதி பெறாததும் தெரியவந்துள்ளது.
முதல்வர் உத்தரவு
இதையடுத்து அப்பள்ளி மீது கிரிமினல் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த பிரச்சினையில் உறுதியான நடவடிக்கையை எடுக்க வேண்டும் என்று காவல்துறைக்கு முதல்வர் சித்தராமையா உத்தரவிட்டுள்ளார்.
மகளிர் ஆணையம் தலையீடு
தேசிய மகளிர் ஆணைய தலைவியான லலிதா குமாரமங்கலம் இதுகுறித்து கூறுகையில், மகளிர் ஆணையம் தானாக முன்வந்து (suo motu) இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள உள்ளது. இருப்பினும் காவல்துறை துரித கதியில் விசாரணை நடத்தி வருவது திருப்தியளிக்கிறது என்றார்.
நான்கு மாதங்களில் 3வது சம்பவம்
பெங்களூர் பள்ளிகளில் சிறுமிகள் பலாத்காரம் செய்யப்படுவது கடந்த நான்கு மாதங்களில் இது மூன்றாவது முறையாகும். ஜூலை மாதத்தில் 6 வயது பெண் குழந்தையும், ஆகஸ்ட் மாதத்தில் 8 வயது பெண் குழந்தையும் பள்ளி வளாகத்தில் பலாத்காரம் செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.