சிக்கிம் எல்லையில் 2 வாரத்தில் இந்திய ராணுவம் மீது தாக்குதல்.. மிரட்டும் சீனா
சிக்கிம் எல்லையில் 2 வாரத்தில் இந்திய ராணுவம் மீது தாக்குதல் நடத்தப்படும் என மிரட்டுகிறது சீனா.
டெல்லி: சிக்கிம் எல்லையில் இந்திய ராணுவம் மீது இன்னும் 2 வாரங்களில் தாக்குதல் நடத்தப்படும் என சீன அரசு ஊடகம் மிரட்டல் விடுத்துள்ளது.
பூடானின் டோக்லா பீடபூமியை ஆக்கிரமிக்கும் நோக்கத்தில் சீனா சாலை அமைக்கும் பணியை மேற்கொண்டதை ஜூன் 16-ந் தேதியன்று நமது ராணுவம் தடுத்து நிறுத்தியது. இதனைத் தொடர்ந்து அப்பகுதியில் தொடர்ந்து போர் பதற்றம் நீடித்து வருகிறது.
இதனைத் தொடர்ந்து சீன அரசு ஊடகங்கள் தொடர்ந்து மிரட்டல் போக்கை கடைபிடித்து வருகின்றன. 1962-ம் ஆண்டு யுத்தம் போல இந்தியாவுக்கு பதிலடி தருவோம் எனவும் கூறி வருகின்றன.
இந்நிலையில் சீன அரசு ஊடகமான குளோபல் டைம்ஸ் வெளியிட்டுள்ள கட்டுரை ஒன்றில் பாதுகாப்பு வல்லுநர்கள் கருத்துகள் இடம்பெற்றுள்ளன. அதில், டோக்லாம் பகுதியில் இருதரப்பும் ராணுவத்தை குவித்து வருகின்றன.
இந்த பதற்றம் நீண்டகாலத்துக்கு நீடிக்காது. தற்போது நடைபெறுவது ஒரு போருக்கான ஒத்திகை. டோக்லாம் பகுதியில் இந்திய ராணுவம் மீது அடுத்த 2 வாரங்களில் சீனா தாக்குதல் நடத்தக் கூடும். இந்திய வெளியுறவுத் துறைக்கு தகவல் தெரிவித்துவிட்டே இத்தாக்குதல் நடைபெறும் என குறிப்பிடப்பட்டுள்ளது.