1967-ல் 400 சீன ராணுவத்தினர் கொன்று குவிக்கப்பட்ட சிக்கிம் நாதுலா போர்க்களத்தை மறந்தது ஏனோ?
1967-ல் சிக்கிம் நாதுலா போர்க்களத்தில் 400 சீன ராணுவத்தினர் கொன்று குவிக்கப்பட்ட வரலாறை மறந்து சீனா பேசுவதாக பாதுகாப்பு வல்லுநர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
டெல்லி: 1962-ம் ஆண்டு யுத்தம் பற்றி பேசி இந்தியாவை மிரட்டி வரும் சீனா 1967-ம் ஆண்டு சிக்கிமில் வாங்கிய மரண அடிகளைப் பற்றி பேசுமா? என பாதுகாப்பு வல்லுநர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
பூடானின் டோக்லாம் பீடபூமியை கைப்பற்ற சீனா முயற்சிக்கிறது. இதைத் தடுக்கும் வகையில் நமது ராணுவம் அப்பகுதிகளில் குவிக்கப்பட்டுள்ளது.
இதை கடுமையாக எதிர்க்கும் சீனா, 1962 யுத்தத்தில் இந்தியா சந்தித்த தோல்வியை சுட்டிக்காட்டி மிரட்டி வருகிறது. சீனா ஊடகங்களும் இதேபோல் எழுதி வருகின்றன.
சிக்கிமில் மரண அடி
ஆனால் சீனா வசதியாக 1967-ம் ஆண்டு இதே சிக்கிம் எல்லையில் மரண அடி வாங்கிய வரலாறை மறந்துவிடுகிறது என்கின்றனர் பாதுகாப்பு வல்லுநர்கள். ஆம் சிக்கிமின் நாதுலா மற்றும் சோ லா கணவாய் பகுதிகளில்தான் அந்த யுத்தம் நடைபெற்றது.
நாதுலாவில் ஊடுருவல்
1967-ம் ஆண்டு செப்டம்பர் 11-ந் தேதி நாதுலா கணவாய் பகுதியில் ஊடுருவியது சீனா. இதைத் தடுத்து நமது ராணுவம் தாக்குதலை நடத்தியது. 1967-ம் ஆண்டு செப்டம்பர் 14-ந் தேதி வரை இந்த யுத்தம் நடைபெற்றது.
400 பேர் பலி
இதில் 400-க்கும் அதிகமான சீனா ராணுவத்தினர் கொன்று குவிக்கப்பட்டனர். நமது ராணுவத்தினர் 88 பேர் உயிர்த் தியாகம் செய்து மாவீரர்களாகினர்.
சோலா கணவாய்
அதே 1967-ம் ஆண்டு அக்டோபர் 1-ந் தேதி நாதுலா கணவாய் அருகே உள்ள சோ லா பகுதியிலும் சீனா ராணுவம் ஊடுருவ முயற்சித்தது. அப்போதும் நமது ராணுவத்தினர் சரியான பதிலடி கொடுத்து சீனாவை விரட்டியடித்தனர்.
வரலாறு மறந்த சீனா
இந்த வரலாறுகளை சீனா மறந்துவிட்டு 1962-ம் ஆண்டு யுத்தம் பற்றி மட்டுமே பேசுகிறது. இந்தியாவை ஊடகங்கள் மூலம் மிரட்டும் போக்கை கைவிட்டுவிட்டு ஆக்கப்பூர்வமாக செயல்பட வேண்டியது சீனாதான் என்கின்றனர் பாதுகாப்பு துறை வல்லுநர்கள்.