உத்தரகாண்ட்டில் ஊடுருவிய சீனா ராணுவ ஹெலிகாப்டர்... ஹரீஷ் ராவத் தகவல்
டெல்லி: உத்தரகாண்ட் மாநிலம் சமோலி மாவட்டத்துக்குள் சீனா ராணுவத்தின் ஹெலிகாப்டர் ஊடுருவியதை அம்மாநில முதல்வர் ஹரீஷ் ராவத் உறுதிசெய்திருக்கிறார்.
நாட்டின் லடாக் மற்றும் அருணாச்சல் பிரதேசத்தின் சில பகுதிகளை சீனா உரிமை கொண்டாடி வருகிறது. இதில் அருணாச்சல் மாநிலத்தை சர்ச்சைக்குரிய பகுதியாக தங்களது நாட்டின் ஒருபகுதியாக சீனா கூறிவருகிறது.
இதற்கு இந்தியா மிகக் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து கண்டனமும் தெரிவித்திருக்கிறது. ஆனாலும் பொருட்படுத்தாத சீனா ஊடுருவலை தொடர் கதையாக வைத்திருக்கிறது.
அருணாச்சலில் ஊடுருவல்
கடந்த மாதமும் கூட அருணாச்சல பிரதேசத்துக்குள் சீனா ஊடுருவியது. அப்போது இருதரப்பு வீரர்களிடையே கைகலப்பு ஏற்பட்டது. இதனால் இந்தியா- சீனா இடையே பதற்றம் உருவானது.
உத்தரகாண்ட்டில் ஊடுவல்
இந்த நிலையில் கடந்த 19-ந் தேதி உத்தரகாண்ட் மாநிலம் சமோலி மாவட்டத்துக்குள் சீனாவின் ராணுவ ஹெலிகாப்டர் ஒன்று ஊடுவியிருக்கிறது. இந்திய பகுதியில் 5 நிமிடங்கள் பறந்த இந்த ஹெலிகாப்டர் பின்னர் சீனாவுக்குள் சென்றுள்ளது. இது தொடர்பாக இந்தோ- திபெத் எல்லைப் பாதுகாப்பு படையினர் உள்துறை அமைச்சகத்துக்கு அறிக்கை அனுப்பியுள்ளனர்.
உரிய விசாரணை
சீனாவின் இந்த ஊடுருவல் குறித்து கருத்து தெரிவித்த மத்திய உள்துறை இணையமைச்சர் கிரண் ரிஜ்ஜூ, எல்லையில் இந்தோ-திபெத் எல்லை பாதுகாப்பு படையினர் பாதுகாப்பு பணியில் உள்ளனர். அவர்களிடம் விரிவான அறிக்கை கேட்கப்பட்டுள்ளது. சீன ஹெலிகாப்டர் ஊடுருவியது பற்றி தீவிர விசாரணை நடத்தப்படும் என்றார்,
ஊடுருவல் உண்மைதான்...
உத்தரகாண்ட் முதல்வர் ஹரீஷ் ராவத் கூறுகையில், இதுதொடர்பான செய்திகள் உண்மையானதே. நம்முடைய எல்லைப் பகுதியானது இப்போது வரையில் அமைதியாக உள்ளது. முதலில் இருந்தே நாங்கள் கண்காணிப்பை அதிகரிக்க கேட்டுக் கொண்டோம் எனக் கூறியுள்ளார்.