டெல்லி தேவாலய தாக்குதல்கள் அனைத்தும் மதவாத மோதல்கள் அல்ல: டெல்லி போலீஸ்
டெல்லி: டெல்லியில் தேவாலயங்கள் மதமோதல்களின் போது தாக்கப்படவில்லை என்று உள்துறை அமைச்சகத்திடம் டெல்லி போலீசார் அறிக்கை தாக்கல் செய்துள்ளனர்.
டெல்லியில் தில்சாத் கார்டன் தேவாலயம் தீ வைத்து எரிக்கப்பட்ட போது கிறிஸ்துவர்கள் மீதான மதவெறித் தாக்குதல் என்று கூறப்பட்டது. ஆனால் டெல்லி போலீசார் தாக்கல் செய்த அறிக்கையிலோ மின்கசிவால் ஏற்பட்ட தீ விபத்து என கூறப்பட்டுள்ளது.
இதேபோல் மொத்தம் 6 தேவாலய தாக்குதல் வழக்குகளையும் டெல்லி போலீசார் விசாரித்திருக்கின்றனர்.. இதில் ஒரு தேவாலயம் சூறையாடப்பட்ட சம்பவமும் அடங்கும்.
ஆனால் தேவாலயங்கள் எரிக்கப்பட்டதாக கூறப்படும் 2 சம்பவங்களுமே மின்கசிவால் ஏற்பட்டது; மேலும் 2 சம்பவங்களானது தனிநபர் மோதல்களால் தேவாலயங்கள் மீது கல்வீசித் தாக்கப்பட்டன எனவும் கூறப்பட்டுள்ளது.
எஞ்சிய 2 தேவாலயங்களும் திருட்டு சம்பவங்களின் போது தாக்குதல்களுக்குள்ளானவை என்கிறது டெல்லி போலீசின் அறிக்கை.
கன்னியாஸ்திரி பலாத்கார வழக்கு
இதேபோல் மேற்கு வங்கத்தில் வயதான கன்னியாஸ்திரி ஒருவர் பலாத்காரம் செய்யப்பட்டதன் பின்னணியில் மதவாதிகள் இருப்பதாக கூறப்பட்டது. இந்த சம்பவத்தில் 4 வங்கதேச நாட்டவரும் கைது செய்யப்பட்டிருந்தனர்.
தேவாலயத்துக்குள் கொள்ளையடிக்கும் நோக்கத்தில் ஒரு பெரும் கும்பல் சென்றதாகவும் அப்போது அதை தடுக்க முயன்ற கன்னியாஸ்திரி தாக்கப்பட்டார் என்றும் மேற்கு வங்க சி.ஐ.டி. போலீசார் கண்டுபிடித்துள்ளனர். வங்கதேசத்தில் இருந்து ஊடுருவிய கும்பல் கொள்ளையடிக்கும் நோக்கத்தில்தான் அங்கே சென்றதே தவிர கிறிஸ்தவர்கள் என்பதற்காக செல்லவில்லை எனவும் கூறப்பட்டுள்ளது.
டெல்லியைப் பொறுத்தவரையில் 240 தேவாலயங்கள் உள்ளன. இதில் 161 தேவாலயங்களில் சி.சி.டி.வி. காமிராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இதுதரவி போலீஸ் வாகனங்கள் தேவாலயங்களுக்கு வெளியே நிறுத்தப்பட்டுள்ளன. இதேபோன்ற பாதுகாப்பு கிறிஸ்தவ கல்வி நிறுவனங்களுக்கும் கொடுக்கப்பட்டுள்ளன என்கிறது டெல்லி போலீஸ்.