பெங்களூர் குண்டுவெடிப்பு: யார் என தெரியாமல் 100 போலீசார் யாரைத் தான் துரத்துகிறார்கள்?
பெங்களூர்: இந்தியாவில் ஏதாவது தாக்குதல் நடந்தால் விசாரணை அதிகாரிகள் ஒரு தீவிரவாத அமைப்பு மீது குற்றம் சுமத்துவார்கள். பத்திரிக்கையாளர்களை திருப்திபடுத்த சில தீவிரவாத அமைப்புகளின் விவரங்களை போலீசார் தெரிவிப்பர். ஆனால் யார் குண்டு வைத்தது என்பதை தெரிவிக்க மட்டும் தவறிவிடுவார்கள்.
குண்டு வைத்தவர்களை முதலில் துரத்துங்கள், அமைப்பை அல்ல என்று நாங்கள் முன்பே செய்தி வெளியிட்டிருந்தோம்.
பெங்களூரில் உள்ள சர்ச் தெருவில் நடந்த குண்டுவெடிப்பில் சென்னையைச் சேர்ந்த பெண் ஒருவர் பலியானார். அந்த சம்பவம் தொடர்பாக இதுவரை யாரும் கைதானதாக தெரியவில்லை.
குண்டுவெடிப்பு
கடந்த மாதம் 27ம் தேதி இரவு 8.30 மணிக்கு பெங்களூரில் உள்ள சர்ச் தெருவில் குண்டு வெடித்ததில் அப்பாவி தாய் ஒருவர் பலியானார். போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை எல்லாம் நடத்தினர். ஆதாரங்களை கைப்பற்றி தடயவியல் சோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதற்காக போலீசாரை பாராட்ட வேண்டும்.
பிரச்சனை
மீடியாக்கள் கேள்வி கேட்க, போலீசார் பதில் அளிக்கிறார்கள். இந்த தாக்குதலை நடத்தியது யார் என்பது தான் அனைவரும் கேட்கும் கேள்வி. இதை நடத்தியது இந்தியன் முஜாஹிதீனா, சிமியா அல்லது அல் உம்மாவா?. தாக்குதல் நடத்தப்பட்ட விதத்தை வைத்து இந்த அமைப்புகளின் பெயர்கள் அடிபடுகிறது. ஆனால் தற்போது விசாரணையாளர்களை குழப்புவதற்காக தாக்கும் விதத்தை அமைப்புகள் மாற்றுகின்றன.
2013ம் ஆண்டில் மல்லேஸ்வரத்தில் தாக்குதல் நடத்தியது தொடர்பாக அல் உம்மா அமைப்பைச் சேர்ந்தவர்களை தேட போலீஸ் குழு தமிழகம் விரைந்தது. மற்றொரு குழு பல காலமாக தலைமறைவாக உள்ள சிமி அமைப்பைச் சேர்ந்த 5 பேரை தேட மத்திய பிரதேச மாநில போலீசாருடன் சேர்ந்து பணியாற்றுகிறது. மெஹ்தி மஸ்ரூரை எப்படி மறக்க முடியும். பெங்களூரில் ட்விட்டர் மூலம் ஐஎஸ்ஐஎஸ் அமைப்புக்கு ஆட்களை சேர்த்ததற்காக போலீசாரால் கைது செய்யப்பட்டவர் மஸ்ரூர். அவரது கைதுக்கு பழி வாங்க தாக்குதல் நடத்தப்படும் என்று எல்லாம் கூறப்பட்டது. இதனால் பெங்களூர் தாக்குதலுக்கு மஸ்ரூர் தான் காரணம் என்று மீடியாக்கள் கண்மூடித்தனமாக நம்பின.
தவறவிட்டது என்ன?
தற்போது குண்டு தயாரிப்பது ஒன்றும் பெரிய விஷயமே இல்லை. இணையதளத்திலேயே குண்டு தயாரிப்பது எப்படி என்று தெளிவாக உள்ளது. மேலும் தீவிரவாத அமைப்புகள் யாராவது ஒருவரை பிடித்து தாக்குதல் நடத்தச் சொல்வது வழக்கமாகிவிட்டது. அல் கொய்தா உள்ளிட்ட அமைப்புகள் இவ்வாறு தான் செய்கின்றன. அப்படி தாக்குதல் நடத்தும் நபர் முதல் தடவை இது போன்ற செயலில் ஈடுபடுவதால் விசாரணையாளர்களின் கண்காணிப்பு பட்டியலில் இருக்க மாட்டார். இதை யோசிக்காமல் விசாரணையாளர்கள் யார் குண்டு வைத்தது என்பதை கண்டுபிடிப்பதை விட்டுவிட்டு ஏதாவது அமைப்பை துரத்துகிறார்கள்.
தாக்குதல்
நியூயார்க்கில் தாக்குதல் நடத்தியவர் எந்த அமைப்புடனும் தொடர்பில்லாதவர். அவர் தனியாக செயல்பட்டுள்ளார். அமெரிக்க போலீசார் சிசிடிவி கேமரா பதிவுகளை வைத்து அந்த நபரை அடையாளம் காணத் தான் முதலில் முயன்றனர். அவரின் விவரங்களை தெரிந்து கொண்டால் அவரை பிடிக்கும் பணி துவங்கும். அவரை பிடித்துவிட்டால் அமைப்பின் பெயர், நோக்கம் உள்ளிட்டவை தெரிய வரும். இதை பெங்களூர் போலீசாரும் பின்பற்ற வேண்டும்.
100 போலீசார்
பெங்களூர் குண்டுவெடிப்பு தொடர்பாக 100 போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். அவர்கள் நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு சென்று வெறுங்கையுடன் தான் திரும்பியுள்ளனர். அந்த 100 பேரும் யாரைத் துரத்துகிறார்கள் என்று தான் பலர் எண்ணுகிறார்கள். சிசிடிவி கேமரா பதிவு தெளிவாக இல்லை என்று போலீசார் தெரிவித்தனர். அப்படி இருக்கையில் அவர்கள் யாரை துரத்துகிறார்கள்?
போலீசார் குற்றவாளியின் படத்தை வரைந்தபோதிலும் அது சரியானது தானா என்பது தெரியாததால் அதை வெளியிடவில்லை. நல்லவேளை போலீசார் அந்த வரைபடங்களை வெளியிடவில்லை. அதில் ஒன்று குண்டுவெடிப்பு நடந்த அன்று அந்த பகுதியில் சுற்றிய குடிகாரரின் வரைபடம்.