பெங்களூருவில் குண்டு வெடித்த இடத்தில் மர்ம ஆசாமிகள் நடமாட்டம்: நேரில் பார்த்த சாட்சி திடுக் தகவல்
பெங்களூரு: பெங்களூருவில் குண்டு வெடிப்பு நிகழ்ந்த எம்ஜிரோடு பகுதியில் மாருதி ஜென் காரில் வந்த மூன்று பேர் மர்மமான முறையில் கையில் ஒரு பாக்கெட்டுடன் நடமாடியதாக கண்ணால் பார்த்த சாட்சி ஒருவர் போலீசாரிடம் துப்பு கொடுத்துள்ளார்.
பெங்களூரு எம்ஜி ரோட்டில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்ற குண்டு வெடிப்பில் சென்னையை சேர்ந்த பவானி தேவி என்ற 38 வயது பெண் பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் மூவர் காயமுற்றனர். குற்றவாளிகள் குறித்து துப்பு கொடுப்போருக்கு ரூ.10 லட்சம் ரொக்கப்பரிசு வழங்கப்படும் என்று நகர காவல்துறை அறிவித்துள்ளது.
இந்நிலையில் சம்பவ இடத்தில், குண்டு வெடிப்பு நடக்கும் முன்பாக மர்மமான முறையில் மூன்று பேர் நடமாடியதாக கண்ணால் பார்த்த சாட்சி ஒருவர் போலீசாரிடம் தகவல் கூறியுள்ளார். வெள்ளை நிற மாருதி ஜென் காரில் 3பேர் அப்பகுதிக்கு வந்ததாகவும், அதில் இருவர் காரில் இருந்து இறங்கி வந்து வெடிகுண்டு வெடித்த இடத்தின் அருகே சுற்றி திரிந்ததாகவும், மேலும் ஒரு நபர் காருக்குள்ளேயே இருந்ததாகவும் அந்த சாட்சிய நபர் கூறியுள்ளார். மேலும், காரில் இருந்து இறங்கி வந்த இருவரில் ஒருவர் கையில் பை இருந்தது. அவர்கள் நடமாட்டம் மர்மமான முறையில் இருந்தது என்றும் அந்த நபர் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், நேரில் பார்த்த சாட்சியம் கூறியதன் அடிப்படையில் குற்றவாளியின் உருவப்படம் வரையப்பட்டுள்ளது. இருப்பினும் சரியாக உறுதிப்படுத்தாமல் வெளியிடக்கூடாது என்பதற்காக பெங்களூரு போலீசார் காத்திருக்கின்றனர். போலீஸ் கமிஷனர் எம்.என்.ரெட்டி கூறுகையில் "பல சாட்சியங்களிடம் கேட்ட பிறகுதான் உருவப்படம் வெளியிடப்படும். அவசப்பட்டு படத்தை வெளியிட்டால் நிரபராதிகள் சிக்கிக்கொள்ள வாய்ப்பு ஏற்பட்டுவிடும்" என்றார்.
இதனிடையே எம்ஜி ரோட்டில் பதிவாகியிருந்த ஹோட்டல்களின் சிசிடிவி கேமராக்களில் காட்சிகள் துல்லியமாக பதிவாகாததால் குற்றவாளிகளை கண்டுபிடிப்பதில் சிக்கல் நிலவி வருகிறது.