அரசியல் முதிர்ச்சி இல்லாத ராஜீவ் காந்தி... இந்திரா மறைவுக்கு முன்பே கணித்த சிஐஏ
ராஜீவ் காந்தி அரசியல் முதிர்ச்சி இல்லாதவர் என இந்திரா மறைவுக்கு முன்னரே சிஐஏ கணித்திருக்கிறது.
டெல்லி: இந்திரா காந்தி படுகொலைக்கு முன்னரே ராஜீவ் காந்தியை அரசியல் முதிர்ச்சி இல்லாதவர்; கட்சியை பலப்படுத்தும் திறமை இல்லாதவர் என அமெரிக்காவின் உளவு அமைப்பான சிஐஏ கணித்ததாக பழைய ஆவணங்கள் தெரிவிக்கின்றன.
1980களில் இந்தியா- இலக்குகளும் சவால்களும் என்ற தலைப்பிலான சிஐஏவின் அறிக்கை 30 பக்கங்களைக் கொண்டது. இதில் 1985-ம் ஆண்டு நாடாளுமன்ற பொதுத் தேர்தலில் இந்திரா காந்தி மீண்டும் வெல்வாரா? திடீரென அவர் இறந்தால் அடுத்து என்ன நடக்கும் என்பத பல்வேறு விவகாரங்களை சிஐஏ ஆராய்ந்துள்ளது.
இந்திரா காந்தி படுகொலை செய்யப்படுவதற்கு முன்னர் இப்படி ஒரு ஆய்வை சிஐஏ நடத்தியிருக்கிறது. 1983-ம் ஆண்டு ஜனவரி 14-ந் தேதியிட்ட அந்த அறிக்கையில் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள்:
அரசியல் முதிர்ச்சி இல்லை
இந்திரா இறந்தால் அடுத்த தலைவரை தேர்வு செய்வதில் ராஜீவ் முக்கிய பங்கு வகிப்பார். ஆனால் ராஜீவ் அந்த இடத்துக்கு போக முடியாது. ஏனெனில் ராஜிவ் காந்தி அரசியல் முதிர்ச்சியில்லாதவர்.
தாக்கு பிடிக்க முடியாது
கட்சியையோ பொதுமக்களையோ வசீகரிக்கக் கூடியவராக ராஜீவ் இருக்க மாட்டார். அப்படியே ராஜீவ் காந்தி பிரதமராக இருந்தாலும் நீண்டகாலம் தாக்கு பிடிக்க முடியாது.
இந்திராவை போல இல்லை
அவரது தாயாரைப் போல வலிமை மிக்க தலைவராக உருவெடுக்கமாட்டார். அவரால் கட்சியை வளர்த்தெடுக்க முடியாது.
அடுத்த தலைவர்கள்?
இந்திராவுக்குப் பின்னர் ஆர்.வெங்கட்ராமன், பி.வி. நரசிம்மராவ், பிரணாப் முகர்ஜி, என்.டி. திவாரி ஆகியோர் காங்கிரஸில் தலைவர்களாக இருக்கின்றனர். இவ்வாறு சிஐஏ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.