நீதிபதிகள் நியமனம் குறித்து மோடி எதுவும் பேசவில்லையே... தலைமை நீதிபதி தாக்கூர் அதிருப்தி
டெல்லி: பிரதமர் நரேந்திர மோடி தம்முடைய சுதந்திர தின உரையில் நீதிபதிகள் நியமனம் தொடர்பாக எதுவும் பேசாதது குறித்து உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.எஸ். தாக்கூர் அதிருப்தி தெரிவித்துள்ளார்.
நாட்டின் உயர் நீதிமன்ற, உச்ச நீதிமன்ற நீதிபதிகள் நியமனத்தில் புதிய நடைமுறைகளை இறுதி செய்வதில் மத்திய அரசு மற்றும் உச்சநீதிமன்றம் இடையே மோதல் நீடித்து வருகிறது.
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தலைமையிலான 4 மூத்த நீதிபதிகளை கொண்ட கொலிஜியம் பரிந்துரையின் அடிப்படையில் உச்ச நீதிமன்ற மற்றும் உயர்நீதிமன்ற நீதிபதிகள் தற்போது நியமிக்கப்பட்டு வருகின்றனர். கொலிஜியம் அளிக்கும் பரிந்துரையை மத்திய அரசு ஏற்கவேண்டியது தற்போது கட்டாயமாக உள்ளது.
மத்திய அரசுக்கு கண்டனம்
ஆனால் இதற்கு மாறாக கொலிஜியத்தின் பரிந்துரையை தேச நலன் கருதி நிராகரிக்கும் உரிமையைப் பெற மத்திய அரசு முயற்சிக்கிறது. அண்மையில் உச்சநீதிமன்றத்தில் இது தொடர்பான வழக்கு விசாரணையின் போது, நீதிபதிகள் நியமனம் தொடர்பான கொலிஜியத்தின் பரிந்துரைகளை மத்திய அரசு 8 மாதமாக முடக்கி வைத்திருப்பதற்கு கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டிருந்தது.
மனதில் பட்டதை பேசுவோம்...
இந்த நிலையில் உச்சநீதிமன்ற பார் அசோசியேஷன் சார்பில் டெல்லியில் நேற்று நடைபெற்ற சுதந்திர தின நிகழ்ச்சியில் தலைமை நீதிபதி டி.எஸ். தாக்கூர் பங்கேற்று பேசியதாவது: எனது பணிக்காலத்தின் இறுதிக்கட்டத்தை அடைந்ததாக நான் கருதுகிறேன். எனவே எனது மனதில் தோன்றியதை சொல்வதில் எனக்கு எவ்வித தயக்கமும் இல்லை.
நீதிபதிகள் நியமனம் குறித்து மவுனம்
உங்கள் மனதை தொடும் உண்மைகளை நான் பேசியாக வேண்டும். சுதந்திர தினத்தையொட்டி பிரதமரின் உரை மற்றும் சட்ட அமைச்சரை உரையை கேட்டோம். இவற்றில் நீதித்துறை மற்றும் நீதிபதிகள் நியமனம் குறித்த தகவல் இடம்பெறும் என எதிர்பார்த்தோம். ஆனால் இடம்பெறவில்லை.
வழக்குகளை முடிக்க முடியவில்லை..
ஆங்கிலேயர் ஆட்சியில் 10 ஆண்டுகளுக்குள் வழக்குகள் முடித்து வைக்கப்பட்டன. ஆனால் தற்போது அவ்வாறு முடிக்க முடியவில்லை. வழக்குகளின் எண்ணிக்கையும் மக்களின் எதிர்பார்ப்புகளும் அதிகரித்து உள்ளது.
பிரதமர் கவனிக்க வேண்டும்
இதனால் 10 ஆண்டுகளுக்குள் வழக்கை முடிக்க வேண்டும் என்ற நோக்கத்தை நிறைவேற்ற முடியவில்லை. எனவேதான் இப்பிரச்சினையில் பிரதமர் கவனம் செலுத்த வேண்டும் என்று அண்மையில் ஒரு நிகழ்ச்சியில் நான் கேட்டுக்கொண்டேன். இவ்வாறு தாக்கூர் பேசினார்.
டெல்லி விஞ்ஞான் பவனில் கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற ஒரு மாநாட்டில், நீதித்துறையின் பளுவைக் குறைக்க மத்திய அரசு எந்த அக்கறையும் காட்டவில்லை" என்று கூறி, பிரதமர் நரேந்திர மோடி முன்னிலையில் தலைமை நீதிபதி டி.எஸ்.தாக்குர் கண்ணீர் விட்டு அழுதது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.