காங். எம்.எல்.ஏ.க்களுக்கு லஞ்சம்... உத்தரகாண்ட் முதல்வர் ஹரிஷ் ராவத்திடம் சிபிஐ விசாரணை
டெல்லி: உத்தரகாண்ட் சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பில் வெல்வதற்காக தம்முடைய சொந்த கட்சியான காங்கிரஸின் எம்.எல்.ஏ.க்களுக்கு லஞ்சம் கொடுக்க முயற்சித்தது தொடர்பான புகார் குறித்து முதல்வர் ஹரிஷ் ராவத்திடம் சிபிஐ அதிகாரிகள் 5 மணி நேரம் விசாரணை நடத்தினர்.
உத்தரகாண்ட் மாநிலத்தில் ஹரிஷ் ராவத் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடந்து வந்தது. 70 உறுப்பினர்களை கொண்ட மாநில சட்டசபையில் காங்கிரசுக்கு 36 எம்.எல்.ஏ.க்களும், பாஜகவுக்கு 28 உறுப்பினர்களும், காங்கிரசுக்கு ஆதரவு அளிக்கும் முற்போக்கு ஜனநாயக முன்னணிக்கு 6 எம்.எல்.ஏ.க்களும் உள்ளனர்.
கடந்த மார்ச் மாதம் காங்கிரசை சேர்ந்த 9 எம்.எல்.ஏ.க்கள் ஹரிஷ் ராவத்துக்கு எதிராக போர்க்கொடி உயர்த்தினர். இதையடுத்து நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த ஆளுநர் உத்தரவிட்டார். இதையடுத்து, தனக்கு ஆதரவாக வாக்களிக்க வேண்டி அதிருப்தி எம்எல்ஏக்களிடம் ஹரிஷ் ராவத் பேரம் பேசியதாக புகார் எழுந்தது.
மேலும் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் 12 பேருக்கு தலா ரூ25 லட்சம் தர முன்வந்ததற்கான ரகசிய வீடியோ ஆதாரங்கள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனிடையே அங்கு குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டது.
அப்போது, இதுதொடர்பாக கடந்த ஏப்ரல் 29-ம் தேதி சிபிஐ வழக்கு பதிவு செய்தது. இதன்பேரில் மே 9-ம் தேதி நேரில் ஆஜராகுமாறு ராவத்துக்கு சம்மன் அனுப்பப்பட்டது. ஆனால் அவர் நேரில் ஆஜராக அவகாசம் கேட்டிருந்தார். இதனிடையே, நம்பிக்கை வாக்கெடுப்பில் ராவத் வெற்றி பெற்றார்.
இதையடுத்து கடந்த 15-ம் தேதி அமைச்சரவை கூடியது, வீடியோ விவகாரம் குறித்து விசாரணை நடத்த பிறப்பிக்கப்பட்ட உத்தரவை திரும்பப் பெற முடிவு செய்தது. மேலும், மாநில விவகாரம் என்பதால் இதுகுறித்து விசாரணை நடத்த சிறப்பு புலனாய்வுக் குழுவை அமைப்பது என்றும் முடிவு செய்தது.
இந்நிலையில், சிபிஐ விசாரணையை ரத்து செய்ய வகை செய்யும் மாநில அரசின் அறிவிக்கையை ஏற்க சிபிஐ மறுத்துவிட்டது. சிபிஐ விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும் என்ற ராவத்தின் கோரிக்கையை உத்தரகாண்ட் உயர் நீதிமன்றமும் நிராகரித்துவிட்டது.
இதையடுத்து, 24-ம் தேதி நேரில் ஆஜராகுமாறு ராவத்துக்கு சிபிஐ சம்மன் அனுப்பியிருந்தது. இதன்படி, இன்று காலை 11 மணிக்கு டெல்லியில் உள்ள சிபிஐ தலைமை அலுவலகத்தில் ராவத் ஆஜரானார். அவரிடம் வீடியோ ஆதாரங்களை காட்டி சி.பி.ஐ. அதிகாரிகள் அதிரடி விசாரணை நடத்தினர். இந்த விசாரணை சுமார் 5 மணிநேரத்திற்கும் மேலாக நீடித்தது.