மோடியுடன் முதல்வர் ஓ.பி.எஸ் சந்திப்பு- கர்நாடகா அணை கட்ட அனுமதிக்க கூடாது என கோரிக்கை
டெல்லி: டெல்லியில் இன்று பிரதமர் மோடியினை அவரது இல்லத்தில் சந்தித்த தமிழக முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் காவிரியின் குறுக்கே கர்நாடகா அணை கட்டுவதைத் தடுக்க வலியுறுத்தினார்.
டெல்லியில் நிதி ஆயோக் கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பங்கேற்பதற்காக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் சென்னையில் இருந்து விமானம் மூலம் நேற்று இரவு டெல்லி சென்றடைந்தார். அவருடன் தமிழக தலைமைச் செயலாளர் ஞானதேசிகன் சென்றார்.
நிதி ஆயோக் அமைக்கப்பட்டவுடன் நடைபெற்ற ஆட்சி மன்றக் குழு கூட்டத்தில் மூன்று முக்கிய உப குழுக்கள் அமைக்கப்படுவதாக பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார். இவற்றில் இரண்டாவது உப குழுவின் கூட்டம் இன்று நடைபெற்றது.
பஞ்சாப் முதல் அமைச்சர் பிரகாஷ் சிங் பாதல் தலைமையிலான இந்தக் குழுவில் தமிழக முதல்வரும் ஒரு உறுப்பினர் என்பதால், இந்தக் கூட்டத்தில் பங்கேற்க ஓ.பன்னீர்செல்வம் டெல்லி சென்றார்.
டெல்லியில் பிரதமர் நரேந்திரமோடியை அவரது இல்லத்தில் சந்தித்தார் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம். மேலும், இச்சந்திப்பில் காவிரியின் குறுக்கே மேக்கேதாட்டுவில் கர்நாடகா அணைகட்ட அனுமதிக்கக்கூடாது என்று பிரதமரிடம் வலியுறுத்தினார் முதல்வர் பன்னீர்செல்வம்.