பயிர் கடனை ரத்து செய்யுங்கள்... டெல்லியில் எடப்பாடி பழனிச்சாமியிடம் விவசாயிகள் கோரிக்கை
டெல்லி தமிழ்நாடு இல்லத்தில் தங்கியுள்ள முதல்வர் எடப்பாடி பழனிசாமியுடன் தமிழக விவசாயிகள் சந்தித்து பேசினர்.
டெல்லி: பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து டெல்லி ஜந்தர் மந்தரில் போராடி வரும் தமிழக விவசாயிகள் இன்று தமிழ்நாடு இல்லத்தில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்து பேசினார்.
பயிர்கடன் ரத்து, காவிரி மேலாண்மை வாரியம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த சில வாரங்களாக டெல்லியில் விவசாயிகள் போராடி வருகின்றனர்.
குடியரசுத்தலைவர் பதவியேற்பு விழாவில் பங்கேற்க சென்ற போது முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை விவசாயிகள் சந்தித்து பேசினர். எனினும் தங்களின் கோரிக்கைகள் நிறைவேறும் வரை போராட்டம் தொடரும் என்று அறிவித்தனர்.
இந்த நிலையில் துணை ஜனாதிபதி பதவியேற்பு விழாவில் பங்கேற்க வந்த எடப்பாடி பழனிச்சாமியை சந்திக்க விவசாயிகள் காத்திருந்தனர். அப்போது விவசாயிகளுக்கு அனுமதி மறுக்கப்படவே, தமிழ்நாடு இல்லம் முன்பாக ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனையடுத்து டெல்லி தமிழ்நாடு இல்லத்தில் எடப்பாடி பழனிச்சாமியை தமிழக விவசாயிகள் சந்தித்து பேசினர்.தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு சங்கத்தின் தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் விவசாயிகள் முதல்வர் எடப்ப்பாடி பழனிச்சாமியை சந்தித்து பேசினர். அப்போது பயிர்கடன் ரத்து, காவிரி மேலாண்மை வாரியம் உள்ளிட்ட கோரிக்கைகளை முதல்வரிடம் விவசாயிகள் வலியுறுத்தினர்.
டெல்லிக்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி செல்லும்போதெல்லாம் விவசாயிகள் சந்தித்து கோரிக்கை வைத்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.