மன்மோகன்சிங் மீதான நிலக்கரி ஊழல் வழக்கை முடிக்கக் கோரிய சி.பி.ஐ. அறிக்கையை நிராகரித்தது கோர்ட்!
டெல்லி: நிலக்கரிச் சுரங்க ஊழல் தொடர்பாக முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மீதான வழக்கு உட்பட 6 வழக்குகளை முடித்து வைக்குமாறு சி.பி.ஐ. தாக்கல் செய்த அறிக்கையை டெல்லி சிறப்பு நீதிமன்றம் நிராகரித்துவிட்டது.
நிலக்கரிச் சுரங்க ஒதுக்கீட்டில் நடைபெற்ற ஊழல் தொடர்பாக பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டன. இந்த விவகாரத்தில் கடந்த ஆண்டு மார்ச் 10-ந் தேதி சி.பி.ஐ. முதல் குற்றப் பத்திரிகையை தாக்கல் செய்தது.
இதையடுத்து இதுதொடர்பான அனைத்து வழக்குகளையும் தினமும் விசாரிப்பதற்காக சிறப்பு நீதிமன்றத்தை அமைக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இதன்படி சிறப்பு நீதிபதி பராஷர் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 25-ந் தேதி விசாரணையை தொடங்கினார்.
இதில் 15 வழக்குகள் தொடர்பான புலனாய்வு அறிக்கையை சி.பி.ஐ. தாக்கல் செய்தது. இருப்பினும் 9 வழக்குகளில் மட்டும் அறிக்கையை தாக்கல் செய்த சி.பி.ஐ. 6 வழக்குகளை முடித்து வைப்பதற்கான அறிக்கையையும் தாக்கல் செய்திருந்தது.
வழக்குகளை முடித்து வைப்பதற்காக சி.பி.ஐ. தாக்கல் செய்த அறிக்கையில் திருப்தி அடையாத நீதிமன்றம், மேற்கொண்டு விசாரணை நடத்த உத்தரவிட்டது.
இதில் ஒரு வழக்கு ஹிண்டால்கோ நிறுவனத்துக்கு ஒடிஸா மாநிலத்தில் உள்ள தலபிரா 2 நிலக்கரிச் சுரங்கம் ஒதுக்கீடு செய்தது தொடர்பானது ஆகும். இந்த வழக்கில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், தொழிலதிபர் குமார் மங்கலம் பிர்லா, நிலக்கரித் துறை முன்னாள் செயலாளர் பி.சி.பரேக் ஆகியோர் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது.