நள்ளிரவு ஆக்ஷன்.. நடுக்கடலில் தண்ணீர் புகுந்த சரக்கு கப்பல் ஊழியர்களை பத்திரமாக மீட்ட கடற்படை!
மும்பை: கடலில் தத்தளித்த சரக்கு கப்பல் ஊழியர்கள் 6 பேரை சரியான நேரத்திற்கு விரைந்து சென்று கடற்படை வீரர்கள் காப்பாற்றியுள்ளனர்.
குஜராத்தின் போர்பந்தர் துறைமுகத்தில் இருந்து சுமார் 430 டன் சோடா உப்புடன், எம்எஸ்வி.சரோஜினி என்ற சிறிய வகை சரக்கு கப்பல், கேரள மாநிலம் பேபோரே நகருக்கு சென்றுகொண்டிருந்தது.
மும்பையின் கிழக்கே சுமார் 50 கி.மீ தொலைவில் அந்த கப்பல் சென்றுகொண்டிருந்தபோது, திடீரென, ஓட்டை ஏற்பட்டு, இரவு 7 மணியளவில் இன்ஜின் இருந்த அறைக்குள் நீர் புகுந்துவிட்டது. அச்சமடைந்த கப்பல் கேப்டன் உதவி கேட்டு கோரிக்கைவிடுத்தார்.
விரைந்த கப்பல்
தகவல் கிடைக்கப்பெற்ற கடலோர காவல்படை, பாதிக்கப்பட்ட கப்பலில் இருந்து சுமார் 25 கி.மீ தொலைவில் ரோந்து சென்றுகொண்டிருந்த, ஐசிஜிஎஸ் சாம்ராட் கப்பலுக்கு தகவல் அனுப்பியது. இதையடுத்து இரவு 9 மணிக்கெல்லாம் சம்பவ இடத்துக்கு விரைந்தது மீட்பு கப்பல்.
ஊழியர்கள் மீட்பு
பாதிக்கப்பட்ட கப்பலில் இருந்த 6 ஊழியர்களையும் தொடர்புகொண்டு, எப்படி தப்ப வேண்டும் என்பது குறித்த குறிப்புகளை கடற்படை அதிகாரிகள் கொடுத்தனர். இதன்பிறகு மீட்பு படகுகள் மூலமாக, ஆறு ஊழியர்களும் மீட்கப்பட்டனர்.
மற்றொரு கப்பல் ரெடி
அதேநேரம், எம்டி ஹர்ஷ்பிரேம் என்ற மற்றொரு மீட்பு கப்பலும், உதவிக்காக அனுப்பி வைக்கப்பட்டிருந்தது. ஆனால், அதற்கு வேலை கொடுக்காமல், சாம்ராட் கப்பலில் இருந்த வீரர்கள் வெற்றிகரமாக ஆக்ஷனை செய்து முடித்துவிட்டனர்.
இரவு நேர ஆக்ஷன்
இரவில், குளிருக்கு நடுவே வெற்றிகரமாக இந்த மீட்பு பணி நடைபெற்றுள்ளதாக கடலோர பாதுகாப்பு படை வெளியிட்ட செய்திக்குறிப்பு ஒன்று தெரிவிக்கிறது.