11 ஆண்டுகளில் இல்லாத குளிர்... டெல்லிவாசிகளை வாட்டி வதைக்கும் குளிர்... வட மாநிலங்களில் 140 பேர் பலி
டெல்லி: வட மாநிலங்களில் குளிர் வாட்டி வதைக்கிறது. உத்தரபிரதேசத்தில் கடுமையான குளிர்காற்று வீசிவருதால் மக்களின் இயல்புவாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. குளிருக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 140 ஆக உயர்ந்து இருக்கிறது.
டெல்லியில் கடந்த சில நாட்களாக கடும் குளிர் நிலவி வருகிறது. நேற்று அதிகபட்ச வெப்பநிலை 15 டிகிரி செல்சியசாக இருந்தது. இது சாதாரண வெப்பநிலையை விட 7 டிகிரி செல்சியஸ் குறைவாகும். குறைந்தபட்ச வெப்பநிலை 2 டிகிரி குறைந்து 6.4 டிகிரி செல்சியசாக நிலவுகிறது. நகரின் பல்வேறு பகுதிகளிலும் பனி சூழ்ந்ததால், சாலைகளில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. ஞாயிறன்று வீசிய வாடைக்காற்றினாலும், கடும் குளிரினாலும் டெல்லிவாசிகள் வீட்டிற்குள்ளேயே முடங்கிப்போயினர்.
கடந்த 11 ஆண்டுகளுக்குப் பின் நேற்று தான் முதன் முறையாக டெல்லியில் மிகக் குறைந்தபட்ச குளிர் பதிவானது. 2003 ஆம் ஆண்டு கிருஸ்துமஸ் நாளில் டெல்லியில் அதிகபட்சமாக 14.2 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை நிலவியது. தற்போது மீண்டும் கடும் குளிர் வாட்டி வதைக்கிறது. இந்திராபுரம், பரிதாபாத் பகுதியில் அதிகபட்ச வெப்பநிலை 12.4 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையாக இருந்ததாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
ஜம்மு காஷ்மீரில் மிகக்கடுமையான பனிக்காலம் தொடங்கியுள்ளது. 40 நாட்கள் நீடிக்கும் இப்பனிக்காலத்தில் வெப்பநிலை மைனஸ் டிகிரியில் செல்வது வழக்கம். காஷ்மீர் தலைநகர் ஸ்ரீநகரில் நேற்று குறைந்த பட்ச வெப்பநிலை மைனஸ் 1.8 டிகிரி செல்சியசாக இருந்தது. நேற்று முன்தினம் இரவு மைனஸ் 4.4 டிகிரி செல்சியசாக நிலவியது.
இமாச்சல பிரதேசத்தில் சுற்றுலா பகுதிகளான மணாலி, கேலாங், கல்பாவில் முறையே மைனஸ் 3, 7, 1.6 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகி உள்ளது. ஆறுகள், நீர்நிலைகள் உறையும் நிலையில் உள்ளன. இதனால், மக்களின் குடிநீர் தேவை மற்றும் தடையில்லா மின்சாரத்தை வழங்குவதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மாநில அரசு மேற்கொண்டு வருகிறது.
டெல்லியில் குளிர்
தலைநகர் டெல்லியில் கடந்த சில நாட்களாக கடும் குளிர் நிலவி வருகிறது. நேற்று அதிகபட்ச வெப்பநிலை 15 டிகிரி செல்சியசாக இருந்தது. இது சாதாரண வெப்பநிலையை விட 7 டிகிரி செல்சியஸ் குறைவாகும். குறைந்தபட்ச வெப்பநிலை 2 டிகிரி குறைந்து 6.4 டிகிரி செல்சியசாக நிலவுகிறது.
36 விமானங்கள் ரத்து, 50 ரயில்கள் தாமதம்
நகரின் பல்வேறு பகுதிகளிலும் பனி சூழ்ந்ததால், சாலைகளில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. வாகனங்கள் மிகக்குறைந்த வேகத்திலேயே இயக்கப்படுகின்றன. காலை நேரத்தில் பனிமூட்டம் அதிகமாக இருப்பதால் ரயில், விமான போக்குவரத்து பாதிக்கப்பட்டு உள்ளது. பனிமூட்டம் காரணமாக டெல்லியில் இருந்து புறப்படும் 36 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. 50 ரயில்கள் தாமதமாக இயக்கப்பட்டன.
ஸ்வெட்டர் விற்பனை
பஞ்சாப், ஹரியானா மாநிலங்களில் சாதாரண வெப்பநிலைக்கும் குறைவாக குளிர் வாட்டி எடுக்கிறது. கடும் குளிரில் தாக்குபிடிக்க வீடுகளில் மக்கள் நெருப்பு மூட்டி குளிர்காய்கின்றனர். ஸ்வெட்டர் விற்பனை சூடுபிடித்துள்ளது.
ராஜஸ்தானில் மைனஸ் டிகிரி
ராஜஸ்தானில் கடும் குளிரால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் இரவு 0.5 டிகிரி செல்சியஸ் குளிர் நிலவியது.
விமானங்கள் தாமதம்
சண்டிகர் விமான நிலையத்தில் நேற்று பல விமானங்கள் புறப்படுவதில் தாமதம் ஏற்பட்டது. குறைந்தபட்ச வெப்பநிலை 1.6 டிகிரி செல்சியசாக உள்ளதால் மக்கள் வீடுகளில் முடங்கியுள்ளனர்.
இதே போல, உத்தரபிரதேசத்திலும் கடும் குளிர் நிலவுகிறது. வீசிவரும் குளிர்காற்றுக்கு தாக்கு பிடிக்க முடியாமல், நேற்று ஒரே நாளில் 11 பேர் உயிர் இழந்தனர். இவர்களையும் சேர்த்து, அங்கு இதுவரை குளிருக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 140 ஆக உயர்ந்துள்ளது.