அதிமுகவின் இரு அணிகளும் இணைவதற்கு நிபந்தனைகள் விதிப்பது தேவையற்றது: தம்பிதுரை கருத்து
அதிமுகவினர் இடையே ஒற்றுமை இருக்க வேண்டும் என்பதே மக்களின் எதிர்பார்ப்பு எனவும் இரு அணிகளும் இணைவதற்கு நிபந்தனைகள் அளிப்பது தேவையற்றது எனவும் தம்பிதுரை கூறியுள்ளார்.
டெல்லி: அதிமுகவின் இரு அணிகளும் இணைவதற்கு நிபந்தனைகள் விதிப்பது தேவையற்றது என லோக்சபா சபாநாயகர் தம்பிதுரை கருத்து தெரிவித்துள்ளார்.
ஜெயலலிதா மறைவிற்கு பின்னர் அதிமுக இரண்டாக பிளவுபட்டுள்ளது. ஓபிஎஸ் தரப்பினர் ஒரு அணியாகவும், சசிகலா தரப்பினர் மற்றொரு அணியாகவும் தனித்தனியாக செயல்பட்டு வருகின்றனர். அதன் பிறகு இரு அணிகளும் ஒருவர் மீது ஒருவர் குற்றம்சாட்டி வந்தனர்.
இதனால் இரட்டை இலை சின்னம் முடக்கப்பட்டது. இதையடுத்து தற்போது இரு அணிகளும் இணையவேண்டும் என்று தொண்டர்கள் விருப்பம் தெரிவித்துள்ளனர். இதற்கான இரு அணியின் முக்கிய தலைவர்களும் பேசி வருகின்றனர். ஆனால் அதிகாரப்பூர்வ பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று அழைப்பு விடுத்து வருகின்றனர்.
இரு அணிகளும் இணைவது குறித்து யாராவது அணுகினால் கலந்து பேசத் தயார் என முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தனது அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டு இருந்தார். இந்தக் கருத்துக்கு வரவேற்புத் தெரிவித்த லோக்சபா சபாநாயகர் தம்பிதுரை, இரு அணிகளும் இணைவதற்கான தீவிர முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறார்.
இந்நிலையில் டெல்லியில் சன் செய்திக்குப் பேட்டியளித்துள்ள தம்பிதுரை கூறியுள்ளதாவது: அதிமுக ஆட்சி தொடர வேண்டும் என்பதே அனைவரின் விருப்பம். அனைவரும் ஒன்றுபட்டு ஆட்சியை நடத்த உதவ வேண்டும். ஜெயலலிதா கஷ்டப்பட்டு உருவாக்கிய ஆட்சியை இழந்து விடக் கூடாது. கருத்து வேறுபாடுகளை களைய வேண்டும் என்பதே எனது குறிக்கோளாகும். மேலும் இணைப்புக்கு நிபந்தனைகள் அளிப்பது தேவையற்றது என அவர் கருத்து தெரிவித்துள்ளார்.