காங்கிரஸ் எம்.பிக்கள் இருவர் என்னிடம் தப்பாக நடந்து கொண்டனர்.. பெண் அமைச்சர் குற்றச்சாட்டு
டெல்லி: தன்னிடம் ஒழுங்கீனமாக நடந்து கொள்ளும் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த இரு எம்.பிக்களுக்கு எதிராக உரிமை மீறல் பிரச்சினை எழுப்புவேன் என்றும் ஹர்ஷிம்ரத் கவுர் எச்சரித்துள்ளார்.
ஆம் ஆத்மி எம்.பி. பகவந்த் மன்ஸ், சமீபத்தில் சோஷியல் மீடியாவில் வெளியிட்ட நாடாளுணந்ற நடவடிக்கை குறித்த வீடியோ பற்றி ராஜ்யசபாவில் பேச முயன்றபோது தனக்கு எதிராக காங்கிரஸ் எம்பிக்கள் செயல்பட்டதாக குற்றம்சாட்டுகிறார் மத்திய உணவு பதப்படுத்துதல் துறை அமைச்சரான ஹர்ஷிம்ரத் கவுர்.
இரு அமைச்சர்கள்
ஜெய்ராம் ரமேஷ் மற்றும் ரேணுகா சவுத்திரி ஆகிய இரு எம்.பிக்களையும்தான் அவர் குற்றம்சாட்டியுள்ளார். அவர்கள் இருவரின் ஆக்ரோஷ நடவடிக்கையால் அதிர்ச்சி அடைந்ததாக அமைச்சர் குற்றம்சாட்டியுள்ளார்.
கெட்ட வார்த்தை
சவுத்திரி தனக்கு எதிராக கெட்ட வார்த்தைகளை பிரயோகித்ததாகவும், எனவே இரு எம்.பிக்களுக்கு எதிராகவும் சபையில் உரிமை மீறல் பிரச்சினை கொண்டுவரப்படும் என்றும் அமைச்சர் எச்சரித்துள்ளார்.
ஆம் ஆத்மி வீடியோ
ஆம் ஆத்மி எம்பி வெளியிட்ட வீடியோவால் நாடாளுமன்ற பாதுகாப்பு கேள்விக்குறியாகிவிட்டதாக கூறி, லோக்சபா, ராஜ்யசபாவில் நேற்று அமளி ஏற்பட்டது. பாஜகவின் குற்றச்சாட்டு மற்றும் அமளிக்கு காங்கிரஸ் உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
காங்கிரசுக்கு கடுப்பு
ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்க கோரும் தனி நபர் மசோதாவை காங்கிரஸ் உறுப்பினர் கொண்டுவந்த நிலையில் சர்ச்சை வெடித்ததால், பாஜகவுக்கு எதிராக காங்கிரஸ் உறுப்பினர்கள் கோஷமிட்டது குறிப்பிடத்தக்கது.