காங்கிரஸும், பாஜகவும் புருஷன் பொண்டாட்டி மாதிரி: கெஜ்ரிவால் தாக்கு
டெல்லி: பாஜகவுக்கும், காங்கிரஸுக்கும் இடையே கணவன், மனைவி போன்ற உறவு உள்ளது. அந்த இரண்டு கட்சிகளும் சேர்ந்து மக்களை ஏமாற்றுகின்றன என டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.
டெல்லியில் நடந்த ஆம் ஆத்மி கட்சி கூட்டத்தில் கட்சியின் தலைவரும், முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால் கலந்து கொண்டு தொண்டர்கள் மத்தியில் உரையாற்றினார்.
அப்போது அவர் கூறுகையில்,
பாஜக-காங்கிரஸ்
பாஜகவுக்கும், காங்கிரஸுக்கும் இடையே கணவன், மனைவி போன்ற உறவு உள்ளது என்று நினைக்கிறேன். அவர்கள் மிஸ்டர் அன்ட் மிஸ்ஸஸ் பாஜக-காங்கிரஸ். அவர்கள் ஒரு வீட்டுக்குள் சண்டைபோடும் கணவன், மனைவி போன்றவர்கள்.
ரகசியங்கள்
பாஜகவுக்கு காங்கிரஸின் ரகசியங்கள் தெரியும். காங்கிரஸுக்கு பாஜகவின் ரகசியங்கள் எல்லாம் தெரியும். பாதுகாப்புத் துறை அமைச்சர் மனோகர் பாரிக்கரிடம் கோவாவில் உள்ள பல காங்கிரஸ் தலைவர்களுக்கு எதிரான ஆவணங்கள் உள்ளன என்று ஒருவர் என்னிடம் தெரிவித்தார்.
காங்கிரஸ்
மனோகர் பாரிக்கர் தன்னிடம் உள்ள ஆவணங்களை வைத்து சம்பந்தப்பட்ட காங்கிரஸ் தலைவர்கள் மீது நடவடிக்கை எடுக்கமாட்டார். மாறாக அந்த ஆவணங்களை வைத்து அவர் காங்கிரஸை தொடர்ந்து மிரட்டிக் கொண்டே இருப்பார்.
ஏமாற்றுகிறார்கள்
பாஜகவும், காங்கிரஸும் சேர்ந்து மக்களை ஏமாற்றுகிறார்கள். இரு கட்சிகளும் மக்களிடம் இருந்து கொள்ளையடிக்கின்றன. இரண்டு கட்சிகளும் மாபியாக்கள். அவர்கள் மாபியா ராஜ்ஜியம் நடத்தி வருகிறார்கள்.
ஆம் ஆத்மி கட்சி
தேர்தலில் போட்டியிட டிக்கெட்டை எதிர்பார்த்து யாரும் ஆம் ஆத்மி கட்சிக்கு வராதீர்கள். கட்சியில் அனைவரும் பொறுப்பை உணர்ந்து செயல்பட வேண்டும். டிக்கெட் என்பது மற்றும் ஒரு பொறுப்பு.