ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் காங். தலைவர் ஆனந்த் சர்மாவை தாக்கிய மாணவர்கள்
டெல்லி: டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்திற்கு சென்றபோது மாணவர்கள் காங்கிரஸ் தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ஆனந்த் சர்மாவை தாக்கியுள்ளனர்.
டெல்லியில் உள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் நாடாளுமன்ற தாக்குதல் தீவிரவாதி அப்சல் குருவுக்கு ஆதரவாகவும், இந்தியாவுக்கு எதிராகவும் கோஷமிட்ட மாணவர் சங்க தலைவர் கன்ஹையா குமார் தேச துரோக வழக்கில் கைது செய்யப்பட்டார்.
இந்நிலையில் குமார் இந்தியாவுக்கு எதிராக எதுவும் தெரிவிக்கவில்லை என்று கூறி பல்கலைக்கழக வளாகத்தில் மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
சனிக்கிழமை காங்கிரஸ் துணை தலைவர் ராகுல் காந்தி, காங்கிரஸ் தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ஆனந்த் சர்மா ஆகியோர் பல்கலைக்கழகத்திற்கு சென்று மாணவர்களை சந்தித்து பேசினர்.
அவர்கள் அங்கிருந்து கிளம்புகையில் மாணவர்களில் சிலர் ஆனந்த் சர்மாவின் இடது காதில் திரும்பத் திரும்ப தாக்கியதில் அவருக்கு காயம் ஏற்பட்டு ரத்தம் கொட்டியது. மேலும் மாணவர்கள் ராகுலின் காரையும் சுற்றிவளைத்தனர்.
இந்நிலையில் ஆனந்த் சர்மாவை அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத் ஆதரவாளர்கள் தாக்கியதாக கூறப்படுகிறது.