இவ்வளவு பிரச்சனைகள் இருக்கும் போது மத்திய அரசுக்கு மூன்றாவது ஆண்டு கொண்டாட்டமா? ராகுல் ஆவேசம்
காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி தன் டிவிட்டர் பக்கத்தில் நாட்டில் வேலைவாய்ப்பின்மை, விவசாயிகள் தற்கொலை, எல்லையில் ராணுவ வீரர்கள் மரணம் என பல பிரச்சனைகள் இருக்கும்போது ஆளும்கட்சி மூன்றாவது ஆண்டு
டெல்லி: நாட்டில் வேலைவாய்ப்பின்மை, விவசாயிகள் தற்கொலை, எல்லையில் ராணுவ வீரர்கள் மரணம் என பல பிரச்சனைகள் இருக்கும்போது ஆளும்கட்சி மூன்றாவது ஆண்டு விழா கொண்டாட வேண்டுமா என ராகுல்காந்தி தன் டுவிட்டர் பக்கத்தில் கேள்வி கேட்டுள்ளார்.
பாரதி ஜனதா கட்சி கடந்த 2014 மே 16ஆம் தேதி ஆட்சிக்கு வந்தது. இன்றுடன் மூன்றாண்டுகள் நிறைவு அடைகிறது. இந்தியா முழுவதும் மோடி சூறாவளிப் பயணம் மேற்கொண்டு இந்தியாவில் வேலைவாய்ப்பை பெருக்குவேன், ஊழலற்ற இந்தியாவை உருவாக்குவேன் என பல வாக்குறுதிகளை அள்ளித் தெளித்தார்.
அவருடைய பேச்சை முதியவர்களை விட இளைய சமூகம் அதிகம் நம்பியது. அவர்கள் தான் அதிகளவில் வாக்களித்தனர். அதனால் மோடி பிரதமரானார். ஆனால், மத்தியில் பாஜக ஆட்சிக்கு வந்த இந்த மூன்று ஆண்டுகளில் இந்தியாவில் வேலைவாய்ப்பின்மை பெருகி வருகிறது.
தற்போதும் இன்போசிஸ், மைக்ரோசாப்ட் உள்ளிட்ட பெரிய ஐடி நிறுவனங்களில் 2 லட்சம் பணியாளர்கள் வெளியேற்றப்படுகிறார்கள். அதுமட்டுமில்லாமல் பெரிய அளவில் புதிய வேலை வாய்ப்புகள் எந்ததுறையிலும் உருவாக்கப்படவில்லை. காரணம், பணமதிப்பிழப்பு அறிவிப்பால் சிறு, குறு தொழில்கள் நலிவடைந்துள்ளன.
இந்த நிலையில், காங்கிரஸ் கட்சி துணைத்தலைவர் ராகுல்காந்தி, 'நாட்டில் வேலைவாய்ப்பின்மை விவசாயிகள் தற்கொலை, எல்லையில் ராணுவ வீரர்கள் மரணம் என பல பிரச்சனைகள் இருக்கும்போது மூன்றாவது ஆண்டு கொண்டாட்டமா?' என கேள்வி எழுப்பியுள்ளார்.
காங்கிரஸ் தலைவர்கள், பாஜக அரசின் கொள்கைகளையும் கோட்பாடுகளையும் தான் விமர்சிக்க முடிவு செய்துள்ளனர். பிரதமர் மோடி உள்பட எந்த தலைவர்களையும் தனிப்பட்ட முறையில் தாக்குவது இல்லை என முடிவு செய்துள்ளனர்.