டெல்லியில் இன்று காங்கிரஸ் செயற்குழுக் கூட்டம் கூடுகிறது! கட்சி தலைவராகிறார் ராகுல் காந்தி!!
டெல்லி: மாநில சட்டசபை தேர்தல்களில் படுதோல்வியைத் தழுவிய நிலையில் டெல்லியில் காங்கிரஸ் கட்சியின் செயற்குழுக் கூட்டம் இன்று நடைபெறுகிறது. இக்கூட்டத்தில் காங்கிரஸ் கட்சித் தலைவராக ராகுல் காந்தி நியமிக்கப்பட இருப்பதாக டெல்லி தகவல்கள் தெரிவிக்கின்றன.
லோக்சபா தேர்தலில் காங்கிரஸ் படுதோல்வியைத் தழுவியது. அதன் பின்னர் அண்மையில் நடைபெற்ற மகாராஷ்டிரா, ஹரியானா, ஜார்க்கண்ட், ஜம்மு காஷ்மீர் மாநிலங்களின் சட்டசபை தேர்தல்களிலும் காங்கிரஸ் படுதோல்வியையே தழுவியது. இம்மாநிலங்களில் ஹரியானாவில் காங்கிரஸ் ஆளும் கட்சியாகவும் இதர மாநிலங்களில் கூட்டணி அரசிலும் பங்கேற்று இருந்தது.
இந்த தொடர் தோல்விகளால் பெரும் பின்னடைவை எதிர்கொண்டுள்ள நிலையில் டெல்லியில் காங்கிரஸ் கட்சியின் செயற்குழுக் கூட்டம் இன்று காலை நடைபெற உள்ளது. கட்சி மறுசீரமைப்பு குறித்து ஏற்கெனவே மாநில கட்சிகளின் தலைவர்களுக்கு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி கடிதம் அனுப்பியிருந்தார்.
இன்றைய கூட்டத்தில் காங்கிரஸ் கட்சியில் நிர்வாகிகள் மாற்றம் குறித்து விவாதிக்கப்பட்டு முடிவெடுக்கப்பட இருக்கிறது. முக்கியமாக காங்கிரஸ் கட்சியின் தேசியத் தலைவராக தற்போது துணைத் தலைவராக இருக்கும் ராகுல் காந்தி நியமிக்கப்படக் கூடும் என்று கூறப்படுகிறது.,
மேலும் டெல்லி சட்டசபை தேர்தலுக்கான வியூகம் குறித்தும் இன்றைய செயற்குழுக் கூட்டத்தில் விவாதிக்கப்பட இருக்கிறது. டெல்லியில் 15 ஆண்டுகாலம் ஆட்சியில் இருந்தது காங்கிரஸ். இம்மாநிலத்தில் கடந்த 2013ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலில் படுதோல்வியைத் தழுவியது.
தற்போது பிப்ரவரி 7-ந் தேதி மீண்டும் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இத்தேர்தலை எதிர்கொள்வது எப்படி? என்பது குறித்தும் காங்கிரஸ் செயற்குழுக் கூட்டம் விவாதிக்க இருப்பதாக டெல்லி வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.