சேனல் யுத்தத்தில் குதிக்கும் காங்கிரஸ்.. தேசிய அளவிலான டி.வி தொடங்க தீவிர ஆலோசனை
டெல்லி: தேசிய அளவிலான டிவி சேனல் ஒன்றை தொடங்குவது குறித்து காங்கிரஸ் கட்சி தீவிரமாக ஆலோசித்து வருகிறது. கேரளா காங்கிரஸ் கட்சி நடத்தும் ஜெய்ஹிந்த் டிவி சேனலையே தேசிய அளவில் நடத்துவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டு வருகிறதாக காங். வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
கேரளா மாநில காங்கிரஸ் கட்சியால் 2007ஆம் ஆண்டு முதல் ஜெய்ஹிந்த் டிவி நடத்தப்பட்டு வருகிறது. இந்த டிவி சேனலை காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திதான் தொடங்கி வைத்தார்.
இந்த சேனலின் இந்திய அளவிலான தலைமையகம் டெல்லியில் திறக்கப்பட்டது. அப்போது பேசிய முன்னாள் மத்திய அமைச்சர் ஏ.கே. ஆண்டனி, காங்கிரஸ் கட்சி பாரம்பரியமிக்க மிக பழமையான ஜனநாயக கட்சி. இருந்தபோதும் இதர கட்சிகளை ஒப்பிடுகையில் மக்களை சென்றடைவதற்கான புதிய தொழில்நுட்பங்களை கையிலெடுப்பதில் பின் தங்கியதாக இருக்கிறது.
நமக்கு எதிரான பொய் பிரசாரங்களுக்கு பதிலடி கொடுக்க முடியாத நிலை இருக்கிறது.. மக்கள் நீண்ட காலத்துக்கு காங்கிரஸின் சின்னத்தை பார்த்து மட்டுமே வாக்களித்துக் கொண்டிருக்கமாட்டார்கள் என்பதையும் நாம் நினைவில் கொள்ள வேண்டும் என்று கூறியிருந்தார்.
இந்த பேச்சை சுட்டிக்காட்டும் டெல்லி காங்கிரஸ் வட்டாரங்கள் ஜெய்ஹிந்த் டிவியின் டெல்லி அலுவலகம் திறக்கப்பட்டதே அதை கட்சியின் அதிகாரப்பூர்வ தொலைக்காட்சியாக அனைத்து மாநிலங்களுக்கும் விரிவாக்கம் செய்வதற்கான முதல் கட்டம் என்கின்றன.
ஆக விரைவில் காங்கிரஸ் கட்சியின் அதிகாரப்பூர்வ தொலைக்காட்சி உங்கள் வீட்டுக்குள் வர இருக்கிறது!