சர்ச்சைக்குரிய மதுக்கடையை வேறு இடத்திற்கு மாற்றுவதா? போராட்டம் நடத்திய எம்.எல்.ஏ. விஜயதாரணி கைது!
மார்த்தாண்டம் : சர்ச்சைக்குரிய உண்ணாமலைக் கடையில் மூடப்பட்ட டாஸ்மாக் மதுபானக் கடையை வேறு இடத்தில் அமைக்க முயற்சி மேற்கொண்டதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட விளவங்கோடு தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ விஜயதாரணி உள்ளிட்ட 50 பேர் கைது செய்யப்பட்டனர்.
சேலம் மாவட்டம், இ.மேட்டுக்காடு கிராமத்தைச் சேர்ந்த காந்தியவாதி சசிபெருமாள், கடந்த வெள்ளிக்கிழமை கன்னியாகுமரி மாவட்டம், உண்ணாமலைக்கடை பேரூராட்சியில் உள்ள டாஸ்மாக் கடையை மூடக்கோரி செல்7போன் டவர் மீது ஏறி நடத்திய போராட்டத்தின்போது உயிரிழந்தார்.
இதையடுத்து சர்ச்சைக்குரிய அந்த டாஸ்மாக் கடை மூடப்பட்டது. எனினும் அந்த கடையை பள்ளியாடி பகுதியில் மாற்ற மாவட்ட டாஸ்மாக் நிர்வாகம் முயற்சி மேற்கொண்டதாக கூறப்படுகிறது.
இதனைக் கண்டித்து, காங்கிரஸ் எம்.எல்.ஏ. விஜயதாரணி உள்ளிட்ட பலர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து விஜயதாரணி உள்ளிட்ட சுமார் 50 பேரை போலீசார் கைது செய்தனர். அப்போது பேசிய விஜயதாரணி எந்த இடத்திலும் மதுக்கடையை அமைக்கக் கூடாது என வலியுறுத்தினார்.
முன்னதாக நாகர்கோவில் அருகே உள்ள ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு அங்கேயே வைக்கப்பட்டுள்ள சசி பெருமாளின் உடலுக்கு விஜயதாரணி இன்று அஞ்சலி செலுத்த கட்சியினருடன் சென்றார். அஞ்சலி செலுத்த விஜயதாரணிக்கு மருத்துவமனை நிர்வாகம் அனுமதிதர மறுத்துவிட்டது. இதனை கண்டித்து விஜயதாரணி தனது கட்சியினருடன் உள்ளிருப்பு போராட்டம் நடத்தியது குறிப்பிடத்தக்கது.