இந்திய அரசுக்கு ஒரே மதம், ஒரே புனித நூல்தான்: சகிப்பின்மை விமர்சனத்திற்கு மோடி 'நச்' விளக்கம்
டெல்லி: இந்த அரசுக்கு ஒரே ஒரு மதம்தான்.. 'இந்தியா முதலில்' என்பதுதான் எங்கள் மதம். அரசியல் சாசனம்தான் எங்களின் புனித நூல். இந்தியாவின் கொள்கை உலகமே ஒரே குடும்பம் என்பதுதான். என்று பிரதமர் நரேந்திரமோடி லோக்சபாவில் தெரிவித்தார்.
அரசியலமைப்பு குறித்து, நாடாளுமன்றத்தில் நடைபெற்ற விவாதத்திற்கு பதிலளித்து இன்று மாலை, மோடி சுமார் ஒரு மணி நேரம் லோக்சபாவில் உரையாற்றினார். அவரது பேச்சின் முக்கிய அம்சங்கள்:
உலகிலுள்ள அனைத்து மதங்களும் பின்பற்றப்படும், வழிபடப்படும் நாடு இந்தியா மட்டுமே. இயற்கையிலும், கல்லிலும் கடவுளை காணும் தேசம் இது. 12 மதங்களின் பண்டிகைகள் ஒரே மாதிரியான நல்லெண்ணத்துடன் கொண்டாடப்படும் நாடு இந்தியா.
அரசியலமைப்பை பலப்படுத்த வேண்டுமானால், மக்களுக்கு அதுகுறித்து தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட வேண்டும். மனிதன் அழிவற்றவன் கிடையாது. ஆனால், அரசியல் சாசனம் அழியாது.
அம்பேத்கரால் மட்டுமே இப்படியான ஒரு அரசியலமைப்பை உருவாக்க முடியும். ஏனெனில் அரசியலமைப்பை அம்பேத்கர் தனது அனுபவங்களின் மூலம் உருவாக்கினார்.
அம்பேத்கர், மேல் ஜாதியினரால் கொடுமைகளுக்கு உள்ளானவர். ஆனால், அரசியலமைப்பை உருவாக்கியபோது, அனைத்து தரப்புக்கும் நன்மை கிடைக்க வேண்டும் என்றே நினைத்தார். அவரது அரசியலமைப்பு உருவாக்கத்தில் தனது சொந்த கோபத்தை காட்டவேயில்லை.
மக்களின் ஒற்றுமையையும், மக்களின் மதிப்பையும் உயர்த்தி பிடிக்கும் வகையில், நமது அரசியலமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. இந்திய வளர்ச்சிக்கு அனைத்து அரசுகளும் பங்காற்றியுள்ளன. முன்னாள் பிரதமர்களை நான் குறைத்து மதிப்பிடவில்லை. இதை செங்கோட்டை உரையின்போதே தெளிவாக கூறிவிட்டேன்.
பல வேற்றுமைகள் கொண்ட இந்த நாட்டை இணைக்கும் சக்தி அரசியல் சாசனம். இந்த அரசியல் சாசனம் நமது பெருமை. ஜனநாயகத்தை பலப்படுத்த வேண்டுமானால், அரசியலமைப்பில் கூறியுள்ளதை சரியாக செயல்படுத்த வேண்டும்.
அரசியல்வாதிகள் மீதான நம்பிக்கை மக்கள் மத்தியில், குறைந்துகொண்டு செல்கிறது. அரசியல் சாசனத்தில் கூறப்பட்டுள்ள உரிமைகள் பற்றி மட்டுமே மக்கள் கவலைப்படுகிறார்கள். கடமைகளை செய்ய மறந்துவிடுகிறோம். கடமைகளையும் செய்யும்போதுதான், விதிமுறைகள் ஒழுங்காக நடைபெறும்.
நமது நாட்டில் 80 கோடி இளைஞர்கள் உள்ளனர். நாம் இதைவிட சிறந்த நிலையில் இருந்திருக்க முடியும். அந்த இளைஞர்களுக்கு தேவைப்படும் வாய்ப்புகளை உருவாக்க வேண்டும்.
அம்பேத்கர் மட்டும் அரசியல்சாசனத்தை உருவாக்காமல் இருந்திருந்தால், தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர் நிலைமை என்னவாயிருக்கும்? இது ராஜாவும், மகாராஜாவும் உருவாக்கிய நாடு கிடையாது. இது, ஏழைகளால் உருவாக்கப்பட்ட நாடு.
இந்த அரசுக்கு ஒரே ஒரு மதம்தான்.. 'இந்தியா முதலில்' என்பதுதான் எங்கள் மதம். அரசியல் சாசனம்தான் எங்களின் புனித நூல். இந்தியாவின் கொள்கை உலகமே ஒரே குடும்பம் என்பதுதான்.
அனைவருக்கும் மரியாதை தர வேண்டும், அனைவருடனும் இணைந்து பணியாற்ற வேண்டும், அனைவரும் இணைந்து வாழ வேண்டும் என்பதுதான் இந்தியாவின் கொள்கை. உலகமே ஒரு குடும்பம் என்பதும், நாரியே நாராயணி (பெண்ணே தெய்வம்) என்பதும்தான் இந்தியாவின் கொள்கை. அகிம்சை பெரிய தர்மம், சத்தியமேவ ஜெயதே, அனைத்து மக்களையும் ஒரே மாதிரி பேணுவது என்பதெல்லாம்தான் இந்தியாவின் கொள்கை
இவ்வாறு மோடி பதில் அளித்தார்.