காவிரி மேலாண்மை வாரியத்தை 4 வாரத்துக்குள் அமைக்க மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு!
டெல்லி: காவிரி மேலாண்மை வாரியத்தை 4 வாரங்களுக்குள் மத்திய அரசு அமைக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் இன்று அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.
காவிரியில் 50 டிஎம்சி நீர் கோரி தமிழக அரசு தாக்கல் செய்த மனு மீது நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, லலித் ஆகியோர் விசாரணை நடத்தினர். இன்றைய விசாரணையின் போது கர்நாடகா தரப்பு, அணைகளில் போதுமான நீர் இல்லை என வாதிட்டது.
ஆனால் இதை தமிழக அரசு தரப்பு நிராகரித்தது. இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், காவிரி மேற்பார்வை குழுவை தமிழகமும் கர்நாடகாவும் எதிர்க்கின்றன. ஆகையால் காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பை செயல்படுத்துவதற்கு காவிரி மேலாண்மை வாரியம்தான் இறுதித் தீர்வு.
இந்த மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு ஏன் உடனே அமைக்கவில்லை; காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு உடனே அமைப்பதுதான் தீர்வாகும் என்று கூறினர்.
அத்துடன் காவிரி மேலாண்மை வாரியத்தை 4 வாரங்களுக்குள் மத்திய அரசு அமைக்க வேண்டும் என்றும் நாளை முதல் செப். 27-ந் தேதி வரை 6,000 கன அடிநீரை தமிழகத்துக்கு கர்நாடகா திறந்துவிட வேண்டும் என்றும் உச்சநீதிமன்ற நீதிபதிகள் அதிரடியாக உத்தரவிட்டனர்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்பட்டால் கர்நாடகாவின் அணைகளை அந்த வாரியம் கட்டுப்பாட்டில் எடுத்துக் கொள்ளும்; தமிழகத்துக்கான 192 டிஎம்சி நீரை திறந்துவிடுவதில் சிக்கல் இருக்காது; ஆகையால் மேலாண்மை வாரியத்தை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையை தமிழகம் நீண்டகாலமாக வலியுறுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.