மேகதாது அணைக்கு சுற்றுச்சூழல் அமைச்சக அனுமதி பெற கர்நாடகா 'பலே தந்திரம்'
பெங்களூரு: காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாதுவில் ஒரு அணையாக கட்டாமல் 4 அணைகளாக கட்டி சுற்றுச்சூழல் அமைச்சகத்திடம் அனுமதி வாங்க திட்டமிட்டுள்ளது கர்நாடகா.
காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது பகுதியில் புதிய அணை கட்டி அதன்மூலம் பெங்களூரு, கோலார், சிக்பள்ளாப்பூர், தும்கூரு உள்ளிட்ட தென் மாவட்டங்களுக்கு குடிநீர் வழங்கவும், தண்ணீரை தேக்கி மின்சாரம் உற்பத்தி செய்யவும் கர்நாடக அரசு முடிவு செய்துள்ளது.
பட்ஜெட்டில் நிதி
இந்த திட்டத்துக்கு தமிழகம் கடும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், மேகதாது திட்டத்துக்கு முதல் கட்டமாக கர்நாடக பட்ஜெட்டில் ரூ.25 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த பிரச்னை தொடர்பாக தமிழகம் மற்றும் கர்நாடக அரசியல் கட்சி தலைவர்கள் தனித்தனியாக பிரதமர் நரேந்திர மோடியை நேரில் சந்தித்து தங்கள் தரப்பு நியாயத்தை எடுத்துக் கூறினர்.
ஆய்வு
இந்நிலையில், கர்நாடக அரசு கேட்டுக் கொண்டதை அடுத்து பெங்களூருவை சேர்ந்த ஒரு தனியார் நிறுவனம் சுமார் 1 மாத காலம் காவிரி ஆற்றில் மேகதாது மற்றும் கர்நாடகம், தமிழ்நாடு எல்லை பகுதியில் கள ஆய்வு நடத்தியது. மேகதாது பகுதியில் 4 அணைகளை கட்டி அதன்மூலம் 70 டி.எம்.சி. தண்ணீரை தேக்கி வைக்கலாம் என்றும், 1,000 மெகாவாட் மின் உற்பத்தி செய்யும் திட்டத்தை அமல்படுத்தலாம் என்றும் கூறி திட்ட அறிக்கையை தயாரித்து அரசிடம் தாக்கல் செய்துள்ளது.
உயர்மட்ட கூட்டம்
அந்த அறிக்கையில் உள்ள அம்சங்களை நீர்வளத்துறையை சேர்ந்த அதிகாரிகள் ஆய்வு செய்து வருகிறார்கள் என்றும், இதுசம்பந்தமாக விவாதிக்க அமைச்சர்கள் மட்டத்திலான உயர்மட்ட கூட்டம் மிக விரைவில் நடைபெற உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
50 ஆயிரம் ஏக்கர் வனப்பகுதி
மேகதாதுவை சுற்றி அடர்ந்த வனப்பகுதி உள்ளது. எனவே ஒரே அணையை பெரிதாக கட்டினால், சுமார் 50 ஆயிரம் ஏக்கர் வனப்பகுதி மூழ்கும். எனவே, மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் அனுமதி கிடைக்க வாய்ப்பு இல்லாமல் போய்விடும். எனவே, சுற்றுச்சூழல் அமைச்சக அனுமதியை பெறும் வகையில், 4 சிறு அணைகளை கட்ட கர்நாடக மாநில அரசு ஆலோசித்து வருகிறது.
ஒரு பெரிய அணை
4 அணைகளில் ஒரு அணையை மட்டும் பெரியதாகவும், மற்ற 3 அணைகளை சிறிய அளவிலும் கட்டலாம் என்றும், பெரிய அணையில் சுமார் 40 டி.எம்.சி. தண்ணீரும், மற்ற 3 அணைகளில் தலா 10 டி.எம்.சி. தண்ணீரும் தேக்கி வைக்க முடியும் என்றும் அறிக்கையில் அரசுக்கு சிபாரிசு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இவற்றில் 40 டி.எம்.சி. தண்ணீர் தேக்கி வைக்கப்படும் அணை அருகே 1,000 மெகாவாட் மின் உற்பத்தி செய்யும் திட்டத்தை அமல்படுத்தலாம் என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.