பல்கலைக்கழக மானிய குழு கலைப்பு- சர்ச்சை மசோதாவை வாபஸ் பெற்ற ஸ்மிருதி
டெல்லி: சர்ச்சைக்குரிய உயர் கல்வி மசோதாவை உயர் கல்வி அமைச்சர் ஸ்மிரிதி இரானி வாபஸ் பெற்றார்.
உயர் கல்வியை நிர்வகிக்கும் அமைப்புகளான யு.ஜி.சி., ஏ.ஐ.சி.டி.இ., என்.சி.டி.இ. போன்றவற்றை கலைத்துவிட்டு, அவற்றுக்கு பதிலாக, தேசிய உயர் கல்வி மற்றும் ஆராய்ச்சி ஆணையம் அமைக்கும் வகையில் கடந்த 2011ம் ஆண்டு ராஜ்யசபாவில், உயர் கல்வி மற்றும் ஆராய்ச்சி மசோதாவை அப்போதைய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் கபில் சிபல் தாக்கல் செய்தார்.
ஆனால், அந்த மசோதாவுக்கு பல்வேறு அரசியல் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன. நாடாளுமன்ற நிலைக்குழுவும் ஆட்சேபனை தெரிவித்தது. அதன்பின் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட நிலையில், அந்த மசோதாவை வாபஸ் பெற மத்திய அமைச்சரவை கடந்த செப்டம்பர் மாதம் ஒப்புதல் அளித்தது. அதன்படி, நேற்று டெல்லி ராஜ்யசபாவில், மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஸ்மிரிதி இரானி சர்ச்சைக்குரிய அந்த உயர் கல்வி மசோதாவை வாபஸ் பெற்றார்.