வாரிசாக மகனை தேர்ந்தெடுக்க டெல்லி இமாமுக்கு சட்ட ரீதியாக உரிமை கிடையாது: டெல்லி ஹைகோர்ட்
டெல்லி: டெல்லி ஜூம்மா மசூதியின் புதிய இமாமாக தமது மகனை இமாம் சையது அகம்து புகாரி தேர்ந்தெடுக்க எந்த ஒரு சட்ட புனிதத் தன்மையும் இல்லை என்று டெல்லி உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.
இந்தியாவில் உள்ள மிகப்பெரிய மசூதிகளில் ஒன்றான டெல்லி ஜும்மா மசூதியில் நாளை இமாம் சையது அகமது புகாரியின் மகன் ஷாபான் சையது புகாரிக்கு புதிய இமாம்' பட்டம் சூட்டப்படுகிறது.
இந்நிகழ்ச்சிக்கு இமாம் புகாரி சார்பில் இந்திய, வெளிநாட்டு தலைவர்கள் சுமார் ஆயிரம் பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது. பிரதமர் மோடியை இந்த நிகழ்ச்சிக்கு அழைக்காமல் பாகிஸ்தான் பிரதமர் நவாஷ் ஷெரீப்பை அழைத்து இருந்ததால் சர்ச்சை ஏற்பட்டது.
இதனிடையே இமாம் தேர்வுக்கு எதிராக 3 பொதுநலன் வழக்குகள் டெல்லி உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த டெல்லி உயர்நீதிமன்றம் துணை இமாமாக தமது மகனை சையது புகாரி தேர்ந்தெடுக்க எந்த ஒரு சட்டரீதியான புனிதத் தன்மையும் இல்லை. இதுவரை புகாரி மீது ஏன் வக்பு வாரியம் நடவடிக்கை எடுக்கவில்லை? என்று கேள்வி எழுப்பியது.
மேலும் துணை இமாம் நிகழ்ச்சிக்கு தடை விதிக்க முடியாது என்று கூறிய டெல்லி உயர்நீதிமன்றம் மத்திய அரசு, வக்பு வாரியம் மற்றும் இமாம் புகாரி விளக்கம் அளிக்க நோட்டீஸ் அனுப்பியுள்ளது.