காஷ்மீர் அரசியல்வாதிகளின் கூட்டுக் கொள்ளையை தடுத்துள்ளேன்: தேர்தல் பிரச்சாரத்தில் மோடி பேச்சு
ஸ்ரீநகர்: காஷ்மீரின் உத்தம்பூர் நகரில் இன்று நடைபெற்ற சட்டசபை தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் நரேந்திரமோடி பங்கேற்று பாஜகவுக்கு ஆதரவு திரட்டி உரையாற்றினார்.
அப்போது அவர் பேசியதாவது: எனக்கு முன்பு வேறு எந்த பிரதமரும் ஜம்மு காஷ்மீருக்கு அடிக்கடி வந்தது கிடையாது. இம்மாநிலத்தின் மீது எனக்கு பிடிப்பு அதிகம். வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட காஷ்மீர் மக்களோடுதான் தீபாவளி கொண்டாட வேண்டும் என்று நான் முடிவெடுத்தேன். இதற்கு அரசியல் காரணம் கிடையாது.
ஊழல், கொள்ளை மற்றும் எமோஷனல் பிளாக்மெயில் ஜம்மு காஷ்மீர் அரசியல்வாதிகளின் வாடிக்கையாகிவிட்டது. காஷ்மீருக்கு உதவ மத்திய அரசு தயாராகவே உள்ளது. ஆனால் நாங்கள் தரும் பணம் எங்கு செல்கிறது என்பதை உறுதி செய்ய வேண்டியதும் எங்கள் கடமை. நான் அதுபோன்ற நடவடிக்கையை துவங்கியதால்தான், காஷ்மீரில் ஆளுபவர்களும், எதிர்க்கட்சிகளும் என்மீது கடுமையான விமர்சனங்களை முன்வைக்கின்றன. சேர்ந்து கொள்ளையடித்த காலத்தை நான் முடித்து வைத்துவிட்டேன்.
ராஜிவ்காந்தி பிரதமராக இருந்தபோது இதைத்தான் சொன்னார். டெல்லியில் இருந்து 1 ரூபாய் ஒதுக்கப்பட்டால் உரியவர்களுக்கு 15 பைசாதான் சென்று சேருகிறது, மிச்சம் 85 பைசா கொள்ளையடிக்கப்படுகிறது என்று ராஜிவ் கூறினார். காங்கிரஸ், தேசிய மாநாட்டு கட்சி, மக்கள் குடியரசு கட்சி போன்றவற்றை மக்கள் நன்கு தெரிந்து வைத்துள்ளனர்.
முதல்முறையாக மக்கள் ஒரு முடிவுக்கு வந்துள்ளனர். ஜம்மு காஷ்மீரை இனியும் கொள்ளையடிக்க விடக்கூடாது என்பதுதான் அந்த முடிவு. காஷ்மீருக்கு ஒதுக்கப்பட்ட பணம் எங்கு சென்றது என்பதை நாங்கள் கண்டுபிடித்தே தீருவோம்.
காஷ்மீரில்தான் ஆளும் கட்சியும், எதிர்க்கட்சியும் ஒன்றாக சேர்ந்துள்ளன. எதற்காக தெரியுமா..? என்னை விமர்சனம் செய்ய. இருவரும் சேர்ந்து என்னை விமர்சனம் செய்ய தேவை என்ன வந்தது? நான் அவர்கள் கொள்ளையை தடுத்து நிறுத்தியதுதான் இதற்கெல்லாம் காரணம்.
காஷ்மீரின் சுற்றுலா துறையை மீண்டும் வளர்த்தெடுக்க உள்ளேன், இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு தர உள்ளேன். கடந்த முப்பது ஆண்டுகளில் காஷ்மீருக்கு கிடைக்காத நன்மைகளை எனது ஐந்தாண்டு ஆட்சி காலத்தில் உங்களுக்கு அளிப்பேன்.
காஷ்மீரை ரயில் நெட்வொர்க்கால் இணைக்க வேண்டும் என்ற வாஜ்பாயின் கனவை நான் நிறைவேற்றுவேன். வளர்ச்சியை தவிர காஷ்மீரை முன்னேற்ற வேறு மார்க்கம் கிடையாது. உங்கள் கண்ணீரை துடைக்கவே நான் இங்கு வந்துள்ளேன்.
முதல்கட்ட வாக்குப்பதிவில் அபார வாக்குப்பதிவுக்கு வித்திட்ட மக்களுக்கு நான் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு மோடி பேசினார்.