டெல்லி மாநகராட்சியை கைப்பற்றியது பாஜக.. மூன்றாம் இடத்துக்கு தள்ளப்பட்டது காங்கிரஸ்
டெல்லியில் நடைபெற்ற மூன்று மாநகராட்சிக்கான தேர்தலில் பாஜக அதிக இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. ஆளும் ஆம் ஆத்மி கட்சி இரண்டாம் இடமும், காங்கிரஸ் கட்சிக்கு மூன்றாம் இடமும் கிடைத்துள்ளன.
டெல்லி: டெல்லி மாநகராட்சி தேர்தலில் பாஜக 184 வார்டுகளில் வெற்றி பெற்றுள்ளது. இது ஆளும் ஆம் ஆத்மி கட்சிக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.
டெல்லியின் வடக்கு, தெற்கு மற்றும் கிழக்கு நகராட்சிகளில் உள்ள 272 வார்டுகளில் 270 வார்டுகளுக்கு ஏப்ரல் 23ம் தேதி தேர்தல் நடைபெற்றது.
கிழக்கு டெல்லியின் மஜ்பூர் மற்றும் வடக்கு டெல்லியின் சராய் பிபால் தலா உள்ளிட்ட வார்டுகளில் சமாஜ்வாதி கட்சி வேட்பாளர் உயிரிழந்ததையடுத்து அந்த இரண்டு வார்டுகளுக்கும் தேர்தல் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இதனால் 270 வார்டுகளுக்கு மட்டும் வாக்குப்பதிவு நடைபெற்றது. இத் தேர்தலில் 57 சதவீதம் வாக்குகள் பதிவானது.
தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணப்பட்டு நேற்று முடிவுகள் வெளியிடப்பட்டன. இதில் 181 வார்டுகளை பாஜக கைப்பற்றியுள்ளது. ஆம் ஆத்மி கட்சியால் 48 இடங்களை மட்டுமே கைப்பற்ற முடிந்தது. காங்கிரஸ் கட்சி 30 இடங்களை கைப்பற்றி மூன்றாவது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது.
பாஜகவின் வெற்றி காங்கிரஸ், ஆம் ஆத்மி கட்சிக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளதாக கருதப்படுகிறது. அக்கட்சி மீது மக்களுக்கு ஏற்பட்டுள்ள எதிர்ப்புணர்வே தேர்தல் தோல்வி வெளிப்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது. பாஜகவுக்கு மக்கள் ஆதரவு பெருகி வருவதையே தேர்தல் முடிவுகள் வெளிப்படுத்துவதாக பாஜகவினர் தெரிவித்துள்ளனர்.
டெல்லி மாநகராட்சி தேர்தலில் காங்கிரஸ் கட்சி தோல்வியடைந்ததற்கு தார்மீக பொறுப்பேற்று தனது டெல்லி காங்கிரஸ் கட்சித் தலைவர் பதவியை ராஜினாமா செய்வதாக அஜய் மக்கான் அறிவித்துள்ளார்.