மும்பை டி.சி.எஸ். சாப்ட்வேர் என்ஜினியர் எஸ்தர் படுகொலை: பலாத்கார குற்றவாளிக்கு மரண தண்டனை!
மும்பை: மும்பையில் டி.சி.எஸ். நிறுவன சாப்ட்வேர் என்ஜினியர் எஸ்தர் அனுயா பலாத்காரம் செய்து படுகொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளி சந்திரபான் ஸ்னாப்புக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
ஆந்திரா மாநிலம் விஜயவாடாவைச் சேர்ந்தவர் 23 வயது எஸ்தர் அனுயா என்ற சாப்ட்வேர் என்ஜினியர் மும்பையில் டி.சி.எஸ். நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். அவர் கடந்த ஆண்டு கிறிஸ்துமஸ் விழாவை கொண்டாட ஆந்திராவில் உள்ள தனது சொந்த ஊருக்கு சென்றுவிட்டு மும்பை திரும்பினார்.
ஆனால் அதன் பின்னர் அவர் நிலைமை என்னவானது என தெரியவில்லை. இது தொடர்பாக எஸ்தர் அனுயாவின் பெற்றோரும் போலீசில் புகார் தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில் மும்பையின் புறநகர் பகுதியில் எஸ்தர் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். சுமார் 10 நாட்களுக்கு பிறகு அவரது உடல் அழுகிய நிலையில் கண்டுபிடிக்கப்பட்டது. பிரதே பரிசோதனையில் அவர் மர்மமான முறையில் படுகொலை செய்யப்பட்டிருப்பது தெரியவந்தது.
இதுதொடர்பாக எஸ்தரின் தந்தை ஜொனாதன் சுரேந்திர பிரசாத் மத்திய உள்துறை அமைச்சர் சுஷில் குமார் ஷிண்டேவையும் சந்தித்து பேசினார். இதையடுத்து இவ்வழக்கில் தீவிர விசாரணை நடத்தப்பட்ட சந்திரபான் ஸ்னாப் என்பவன் கைது செய்யப்பட்டான்.
அவன் மீதான இந்த வழக்கு மும்பை பெண்கள் சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இவ்வழக்கில் சந்திரபான் ஸ்னாப் குற்றவாளி என செவ்வாய்க்கிழமை நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இந்நிலையில் இன்று அவனுக்கு மரண தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார்.