ஜெயிக்கப்போவது யாரு? ஆன்லைனில் கிரிக்கெட் பெட்டிங் நடத்திய 3 புக்கிகள் பெங்களூருவில் கைது!
பெங்களூரு: உலக கோப்பை கிரிக்கெட்டை முன்னிட்டு பெட்டிங்கில் ஈடுபட்ட 3 புக்கிகளை கைது செய்த போலீசார் அவர்களிடமிருந்து லேப்டாப் உள்ளிட்ட உபகரணங்களை பறிமுதல் செய்தனர்.
உலக கோப்பை போட்டிகளின் முடிவுகளை அடிப்படையாக வைத்து சூதாட்டம் நடைபெறுவதாக பெங்களூரு குற்றப்பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து இன்று அதிகாலையில், கனகபுரா ரோடு பகுதியிலுள்ள சென்னமனகெரே அச்சுக்கட்டு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட, இட்டமடு பகுதியில் சூதாட்டம் நடந்த பகுதியில் போலீசார் அதிரடி ரெய்டு நடத்தினர்.
அங்கு சூதாட்டத்தில் ஈடுபட்ட 38 வயதான பிரகாஷ், 29 வயதான ராகவேந்திரா, 45 வயதான துக்காராம் ஆகிய மூவரை, போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து 1 சோனி டிவி, 1 லேப்டாப், ரூ.10 லட்சத்து 60 ஆயிரம் ரொக்கப்பணம், 1 கால்குலேட்டர், 6 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இந்த புக்கிகள் பயன்படுத்திய லேப்டாப்பில் வாடிக்கையாளர்கள் பெயர்கள் உள்ளன. புக்கிகளுக்கும், வாடிக்கையாளர்களுக்கும் இடையே உள்ள பரிமாற்றங்கள் குறித்து தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.