தோழியை தாக்கிய வழக்கில் கிரிக்கெட் வீரர் அமித் மிஸ்ரா கைது: ஜாமீனில் விடுவிப்பு
பெங்களூர்: தோழியை தாக்கிய வழக்கில் கிரிக்கெட் வீரர் அமித் மிஸ்ரா பெங்களூர் போலீசாரால் கைது செய்யப்பட்டார். பின்னர் அவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.
கடந்த மாதம் இந்திய கிரிக்கெட் அணி பெங்களூரில் நடந்த பயிற்சி முகாமில் கலந்து கொண்டது. அப்போது பந்து வீச்சாளர் அமித் மிஸ்ரா பெங்களூரில் தான் தங்கியிருந்த ஹோட்டல் அறைக்கு வந்த தோழியை தாக்கியுள்ளார். இதையடுத்து அந்த பெண் பெங்களூர் போலீசில் அமித் மீது புகார் அளித்தார்.
அமித் தன் முகத்தில் டீ கெண்டியை தூக்கி வீசியதாகவும், கை விரலை ஒடித்ததாகவும் தனது புகார் மனுவில் அந்த பெண் தெரிவித்திருந்தார். அவரது புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் அமித் மிஸ்ராவை நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்குமாறு கூறி சம்மன் அனுப்பினர்.
இதற்கிடையே அமித் நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தால் அவர் மீதான புகாரை வாபஸ் பெறத் தயார் என்று அந்த பெண் தெரிவித்திருந்தார். இந்நிலையில் அமித் இன்று பெங்களூர் போலீசார் முன்பு ஆஜரானார்.
இன்று காலை 10.45 மணி முதல் 3 மணிநேரம் போலீசார் அவரிடம் விசாரணை நடத்தினர். விசாரணைக்குப் பிறகு போலீசார் அவரை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட சிறிது நேரத்தில் அவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.