செளதி செல்வதால் ஒபாமாவின் ஆக்ரா பயணம் திடீர் ரத்து!
டெல்லி: செளதி அரேபியாவுக்கு செல்வதாக் அமெரிக்கா அதிபர் ஒபாமாவின் ஆக்ரா பயணம் திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
இந்தியா வருகை தரும் அமெரிக்கா அதிபர் ஒபாமா உத்தரப்பிரதேச மாநிலம் ஆக்ராவில் உள்ள தாஜ்மஹாலைப் பார்வையிட இருந்ததால் பல கோடி ரூபாய் செலவழித்து பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. ஆனால் ஒபாமா இந்தியா புறப்படுவதற்கு சற்று முன்னர் ஆக்ரா பயணம் ரத்து செய்யப்பட்டுவிட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
செளதி மன்னர் அப்துல்லா மறைவைத் தொடர்ந்து ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ள அந்நாட்டுக்கு ஒபாமா செல்ல வேண்டியிருப்பதாலேயே ஆக்ரா பயணம் ரத்தாகிறது இருப்பது உறுதி செய்யப்பட்டிருக்கிறது. ஒபாமாவின் ஆக்ரா பயணமானது எந்த ஒரு பாதுகாப்பு காரணங்களுக்காகவும் ரத்து செய்யப்படவில்லை.
100க்கும் மேற்பட்ட அமெரிக்க பாதுகாப்பு வீரர்கள் ஆக்ராவில் முகாமிட்டு அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொண்டனர். அதேபோல் இந்திய பாதுகாப்புப் படையினரும் சுமார் 1,000 பேர் இப்பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.
ஒபாமா வருகை நாளில் பார்வையாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டும் இருந்தது. பல இடங்களில் கண்காணிப்பு காமிராக்கள் பொருத்தப்பட்டிருந்தன.
இருப்பினும் அமெரிக்காவின் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த நட்பு நாடு செளதி அரேபியா. இதனால் வேறுவழியின்றி தற்போதைய சூழலில் அந்நாட்டுக்கு செல்ல வேண்டிய நிலை ஒபாமாவுக்கு ஏற்பட்டுள்ளது.
தீவிரவாதத்துக்கு எதிரான பயங்கரவாதப் போரில் அமெரிக்காவின் முக்கிய நட்பு சக்தியாக இருக்கும் செளதி அரேபியா, அமெரிக்கா மீதான இரு முக்கிய தாக்குதல்களை முறியடிப்பதிலும் உதவியும் வகித்தது.
இதனால் செளதிக்கு ஒபாமா திடீரென செல்வதாக அறிவித்தது என்பது ஆக்ராவில் ஓய்வின்றி உழைத்த பாதுகாப்பு படையினரை சலிப்படையவே செய்துள்ளது. சுமார் 300, 400 கி.மீ தொலைவுக்கு விமானங்கள் கூட பறக்க தடை விதிக்கப்பட்டு மிகவும் மெனக்கெட்டு உழைத்த பாதுகாப்பு தரப்பினரை அயர்ச்சி அடையவே செய்திருக்கிறது ஒபாமாவின் ஆக்ரா பயண ரத்து என்பது .