இந்திய வங்கிகளை குறி வைக்கும் ரேன்சம்வேர் வைரஸ்.. சைபர் கிரைம் எச்சரிக்கை.. டிஜிட்டல் இந்தியா கதி?
இந்திய வங்கிகளை ரேன்சம்வேர் வைரஸ் தாக்க வாய்ப்புள்ளதால் எச்சரிக்கையுடன் இருக்குமாறு வங்கி நிர்வாகங்களை சைபர் கிரைம் பிரிவு எச்சரித்துள்ளது.
டெல்லி : அனைத்தும் கணிணி மற்றும் இணையமயமாகிவிட்ட உலகில் இணையத்தை குறி வைத்து நடைபெறும் தாக்குதல் இந்திய வங்கிகளை குறி வைக்க வாய்ப்புள்ளதாக சைபர் கிரைம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
கடந்த சில நாட்களாகவே ரேன்சம்வேர் சைபர் தாக்குதல் உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. பல்வேறு நிறுவனங்கள் இத்தாக்குதலை சமாளிக்க முடியாமல் திணறிவருகின்றன.
ஒரே நாளில் 150 நாடுகளில் உள்ள 2 லட்சம் கம்ப்யூட்டர்களை ரேன்சம்வேர் வைரஸ் முடக்கியுள்ளது.அதிலும் குறிப்பாக பள்ளிகள், கடைகள், மருத்துவமனைகள், இ-மெயில், நிறுவனங்கள் ஆகியவற்றில் உள்ள கம்ப்யூட்டர்களை குறி வைத்து இந்த சைபர் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
முதலில் பிரான்ஸ், இங்கிலாந்து ஆகிய நாடுகளில் உள்ள கணிணிகளை முடக்கிப் போட்ட ரேன்சம்வேர் வைரஸ் பின்னர் ரஷ்யாவில் உள்ள வங்கி இணையதளங்களை முடக்கியது. தற்போது சீனா முழுவதும் 29,000 நிறுவனங் களில் ரேன்சம்வேர் சைபர் தாக்குதல் நடந்திருப்பதாக சீன மீடியாக்கள் தெரிவிக்கின்றன.
பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்கள் இந்த சைபர் தாக்குதலால் அதிகம் பாதிக் கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதே போன்று, ரயில்வே நிலையங்கள், கேஸ் நிலையம், அலுவலகங்கள், ஷாப்பிங் மால்கள், அரசு சேவைகள் ஆகியவற்றிலும் ரேன்சம்வேர் தாக்குதல் நடத்தப்பட்டு வரகின்றன.
கேரளாவில் ஊடுருவிய ரேன்சம்வேர்
மற்ற நாடுகளைப் போல இந்தியாவில் இந்த ரேன்சம்வேர் தாக்குதல் அதிக அளவில் இல்லை என்று சொல்லப்பட்டாலும் நேற்று கேரளாவின் வயநாட்டிலுள்ள பஞ்சாயத்து அலுவலகத்தின் 4 கணிணிகளை ரேன்சம்வேர் முடக்கிப் போட்டது. வைரஸ் தாக்குதலுக்கு ஆளான அந்த கணிணிகள் தனிமைபடுத்தப்பட்டுள்ளதாக அந்த மாநில சைபர்கிரைம் போலீசார் தெரிவித்துள்ளனர்.
வங்கிகளுக்கு குறி
இந்நிலையில் இந்திய வங்கிகளை குறிவைத்து ரேன்சம்வேர் தாக்குதல் நடைபெறும் அபாயம் இருப்பதால் எச்சரிக்கையுடன் இருக்கும்படி வங்கி நிர்வாகங்களுக்கு சைபர் பிரிவு அதிகாரிகள் ரெட் அலெர்ட் கொடுத்துள்ளனர். இதனால் முழுவதும் டிஜிட்டல் மயத்தில் இயங்கும் வங்கிகளின் சேவைகள் முடங்கும் அபாயம் இருப்பதால் முன் எச்சரிக்கையாக செயல்படுமாறு அபாய மணி ஒலிக்கப்பட்டுள்ளது.
எப்படி பரவுகிறது?
ரேன்சம்வேர் வைரஸ் பெரும்பாலும் ஈமெயில் மூலம் கணிணிக்கு பரப்பப்படுகிறது. அல்லது இணையத்திலேயே முழு நேரமும் இருப்பவர்கள் ஏதாவது ஒரு விளம்பரத்தை கிளிக் செய்தால் அதன் மூலம் தானாகவே இந்த வைரஸ் கணிணிக்கு பரப்பப்படும். வைரஸ் பரவிய அடுத்த நிமிடமே கணிணியில் உள்ள தகவல்கள் முடக்கப்பட்டு பூட்டு போட்டு விடும். இந்த பூட்டை திறப்பதற்கான சாவி வைரஸ் பரப்பியவரிடமே இருக்கும், உங்கள் கணிணியில் உள்ள தகவல்களை நீங்கள் மீண்டும் பயன்படுத்த அவர்கள் கோரும் பணத்தை கொடுத்தால் மட்டுமே கணிணியை மீண்டும் பயன்படுத்த முடியும் என்பது தான் இதில் அதிர்ச்சியான விஷயம்.
பீதியை கிளப்பும் ரேன்சம்வேர் 2 வெர்ஷன்
இந்த வைரஸை முறியடிப்பதற்கான வழிகள் இன்னும் கண்டறிய்யப்படாததால் பல கோடி டாலர் லாபத்தை பெறும் இந்த ரேன்சம்வேர் வைரஸ் உலக நாடுகளில் உள்ள கணிணி பயன்பாட்டாளர்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. இதில் இன்னும் அதிர்ச்சியான விஷயம் என்னவென்றால் ரேந்சம்வேர் வைரஸ் தாக்குதலுக்கு அஞ்சிக் கொண்டிருக்கும் இதே வேளையில் ரேன்சம்வேர் 2 வது வெர்ஷன் கண்டுபிடிப்பக்கப்பட்டு விட்டது, இதனால் இன்னும் என்னென்ன விஷமங்கள் அரங்கேற உள்ளது என்பதை பொருத்திருந்து தான் பார்க்க வேண்டும்.