வர்தா வந்தது பெங்களூருக்கு.. மணிக்கு 50 கி.மீ வேகத்தில் காற்று வீசலாம்.. கன மழைக்கு வாய்ப்பு
பெங்களூர்: சென்னையில் நேற்று கரையை கடந்த வர்தா புயல், ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுநிலையாக மாறி தரைப்பகுதி வழியாக கோவா நோக்கி பயணித்தபடி உள்ளது. இதன் காரணமாக தமிழகத்தின் வட மாவட்டங்களிலும், கர்நாடகாவில் பெங்களூர், கோலார், சிக்பள்ளாப்பூர், தும்கூர், ராம்நகர் உள்ளிட்ட தென் மாவட்டங்களிலும் நேற்று மாலை முதல் ஆரம்பித்த மழை இன்னமும் பெய்து வருகிறது.
பெங்களூரில் இன்று காற்று கடந்து செல்லும்போது அதன் வேகம் சுமார் 50 கி.மீ அளவுக்கு இருக்கலாம் என கணிக்கப்பட்டுள்ளதால் மாநகராட்சி ஊழியர்கள் நிவாரண பணிகளுக்காக ரெடியாக உள்ளனர். இருப்பினும் சென்னை அளவுக்கு இங்கு சேதம் இருக்காது என்பது தேசிய பேரிடர் மேலாண்மை அமைப்பின் கணிப்பாகும்.
இன்று இரவு கர்நாடகாவை கடந்து கோவா எல்லைக்குள் காற்றழுத்தம் செல்லும் என்றும், அரபிக் கடலில் அது நாளை கரையை கடக்கும் என்றும் கூறப்படுவதால் கோவாவில் இன்று இரவு முதல் நாளை இரவு வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது.