டி.கே.ரவி மரணம்... கர்நாடக தலைமைச் செயலாளரிடம் சிபிஐ விசாரணை
பெங்களூரு: ஐ.ஏ.எஸ். அதிகாரி டி.கே.ரவியின் மர்மமரணம் தொடர்பாக சி.பி.ஐ. அதிகாரிகள் கர்நாடக மாநில தலைமை செயலாளரிடம் விசாரணை நடத்தினார்கள். மேலும் அவர்கள் சி.ஐ.டி. அலுவலகத்திற்கு சென்றும் விசாரணை நடத்தினார்கள்.
பெங்களூரு கோரமங்களா அருகே அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தவர் ஐ.ஏ.எஸ். அதிகாரியான டி.கே.ரவி. பெங்களூருவில் உள்ள கர்நாடக அரசின் வணிக வரித்துறை கூடுதல் கமிஷனராக பணியாற்றி வந்த ரவி, கடந்தமாதம் 16ம் தேதி தனது வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக மீட்கப்பட்டார். இதுகுறித்து மடிவாளா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
ரவியின் மரணத்தில் மர்மம் இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது. அதனைத் தொடர்ந்து இந்த வழக்கு சி.ஐ.டி. போலீஸ் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது. ஆனால் சி.பி.ஐ. விசாரணை வேண்டு எதிர்க்கட்சிகளும், பொதுமக்களும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அதனைத் தொடர்ந்து டி.கே.ரவி சாவு குறித்து சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரிக்க அரசு உத்தரவு பிறப்பித்தது. ஆனால் 3 மாதத்திற்குள் வழக்கு விசாரணையை முடிக்கும்படி கோரிய அரசின் கோரிக்கையை சி.பி.ஐ. ஏற்கவில்லை.
இந்நிலையில், டி.கே.ரவி சாவு குறித்து விசாரணை நடத்துவதற்காக டெல்லியை சேர்ந்த சி.பி.ஐ. போலீஸ் சூப்பிரண்டு ராஜா பாலாஜி மற்றும் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு கிருஷ்ணமூர்த்தி தலைமையிலான அதிகாரிகள் நேற்று பெங்களூருவுக்கு வந்தனர். அவர்களை பெங்களூரு மண்டல சி.பி.ஐ. போலீஸ் சூப்பிரண்டு சுப்பிரமணிஷ்வரராவ் வரவேற்றார். பின்னர் சி.பி.ஐ. அதிகாரிகள் விதானசவுதாவுக்கு புறப்பட்டு சென்றனர்.
அங்கு கர்நாடக அரசின் தலைமை செயலாளரான கவுசிக் முகர்ஜியை சந்தித்து சி.பி.ஐ. அதிகாரிகள் பேசினார்கள். அப்போது அவர்கள், அதிகாரி டி.கே.ரவி வழக்கு பற்றி விசாரணை நடத்த தற்காலிக அலுவலகம் ஒதுக்கி கொடுக்கும்படி தலைமை செயலாளர் கவுசிக் முகர்ஜியிடம் ஒரு மனுவை கொடுத்தனர்.
அதனைப் பெற்றுக் கொண்ட கவுசிக் முகர்ஜி, ‘டி.கே.ரவி சாவு குறித்த விசாரணைக்கு அரசு முழு ஒத்துழைப்பு கொடுக்கும்' என உறுதி அளித்தார்.
அதனைத் தொடர்ந்து, கர்நாடக அரசின் உள்துறை அமைச்சகத்தின் முதன்மைச் செயலாளர் ககந்தீப்பை சிபிஐ அதிகாரிகள் சந்தித்துப் பேசினர். பின்னர், அங்கிருந்து புறப்பட்டு சி.ஐ.டி. போலீஸ் தலைமை அலுவலகத்திற்கு அவர்கள் சென்றனர்.
அங்கு வழக்கு விசாரணைக்கு தேவையான தகவல்களையும், பிற ஆவணங்களையும் சி.ஐ.டி போலீசாரிடம் இருந்து சிபிஐ அதிகாரிகள் பெற்றுக் கொண்டனர்.
தொடர்ந்து ரவியின் பெற்றோர், மனைவி, டிரைவர் உள்ளிட்டவர்களிடம் விசாரணை நடத்த சிபிஐ அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர். விசாரணை தற்போது தான் தொடங்கப் பட்டுள்ளதால், இது தொடர்பாக யாரும் கைது செய்யப்படுவார்களா எனப் பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
இது தொடர்பாக சிபிஐ போலீஸ் வட்டாரத்தில் விசாரித்த போது, "டி.கே.ரவியின் மரணம் தொடர்பாக முதலில் விசாரித்த சிஐடி போலீசாரின் அறிக்கை ஆய்வு செய்யப்படும். அதே போல ரவியின் உடலை பிரேதப் பரிசோதனை செய்த மருத்துவர்கள், உடன் பணியாற்றிய அதிகாரிகள், குடும்பத்தினரிடம் விசாரிக்கப்படும்.
இறப்பதற்கு முன்பாக ரவி அதிரடியாக சோதனையிட்ட ரியல் எஸ்டேட் மாஃபியாக்கள், மணல் கொள்ளையர்கள், மிரட்டல் விடுத்தவர்கள் ஆகியோரிடம் விசாரணை நடத்தப்படும்' என்றனர்.