விவசாயிகளின் கோரிக்கையை மத்திய அரசால் நிறைவேற்ற முடியும்.. செய்ய மறுக்கிறது.. டி.ராஜா குற்றச்சாட்டு
விவசாயிகளின் கோரிக்கைகள் அனைத்தும் மத்திய அரசால் நிறைவேற்றக் கூடிய கோரிக்கைகள்தான் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலாளர் டி. ராஜா குற்றம்சாட்டியுள்ளார்.
டெல்லி: தமிழக விவசாயிகள் டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் இன்று 14ம் நாளாக போராடி வருகின்றனர். அவர்களை நேரில் சந்தித்து டி. ராஜா ஆதரவு தெரிவித்தார்.
அப்போது அவர் செய்தியாளர்களிடம் பேசியதாவது: விவசாயிகளின் பிரச்சனை குறித்து நாடாளுமன்றத்தில் பேசியது மட்டுமல்லாமல் மத்திய அமைச்சர் அருண் ஜேட்லியை சந்திப்பதற்கும் விவசாயப் பிரதிநிதிகளை அழைத்துச் சென்றோம். அவரிடமும் மனு கொடுக்கப்பட்டிருக்கிறது.
அதற்கு பின்னரும் எந்த விதமான முயற்சியையும் மத்திய அரசு மேற்கொண்டதாகத் தெரியவில்லை. இன்றைக்கும் நாடாளுமன்றத்தில் தமிழக விவசாயிகள் படுகின்ற அல்லல் அவலங்களை எடுத்துக்காட்டி அவர்களுக்கு நிவாரணம் அளிக்க வலியுறுத்தியுள்ளேன்.
டெல்லியில் போராட்டம்
தமிழக விவசாயிகள் கடன் தொல்லைக்கு ஆளாகி ஆங்காங்கே தற்கொலை செய்து கொண்டனர். இந்த சூழலில் தான் அவர்களின் கடன் தள்ளுபடி செய்யப்பட வேண்டும். விவசாயப் பொருட்களுக்கு கட்டுப்படியான விலை கிடைக்க வேண்டும் என்று கோரி போராட்டத்தைக் கையில் எடுத்துள்ளனர்.
பரிதாப நிலை
விவசாயிகள் பெரும் இழப்பிற்கு ஆளாகி இருக்கிறார்கள். அந்த இழப்பிற்கேற்ற நஷ்ட ஈடு வழங்கப்பட வேண்டும். விவசாயிகள் இருக்கும் வாழ்வாதாரத்தையும் இழந்துள்ளனர். எனவே, அவர்களின் பரிதாபகரமான நிலையைப் புரிந்து கொண்டு ஆக்கப்பூர்வமான நடவடிக்கை எடுக்க மத்திய அரசு தவறி வருகிறது.
நெருக்கடியில் விவசாயம்
இன்றைக்கு விவசாயம் பெரும் நெருக்கடியில் சிக்கி இருக்கிறது என்பதை அங்கீகரக்க வேண்டும். நெருக்கடிக்கு உள்ளாகி இருப்பதற்கு பல காரணங்கள் உள்ளன. ஒன்று விவசாயிகள் வாங்கிய கடனை திருப்பிச் செலுத்த முடியவில்லை. இரண்டு விவசாய இடுபொருட்களின் விலை அதிகரித்துக் கொண்டிருக்கிறது. அதே நேரத்தில் விவசாய உற்பத்திப் பொருட்களுக்கு கட்டுப்படியான விலை கிடைக்கவில்லை. மற்றொன்று விவசாயத்திற்கான நீர் ஆதாரங்கள் இல்லாமல் போய்விட்டது.
செய்ய வேண்டியது என்ன?
குறிப்பாக தமிழ்நாடு வறட்சிக்கு ஆளாகியுள்ளது. காவிரி நீர் பிரச்சனை தீர்க்கப்பட வில்லை. எனவே, மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும். வங்கிக்கடனை மத்திய அரசு தள்ளுபடி செய்ய வேண்டும். மூன்றாவதாக விவசாய இடுபொருட்களின் விலை நியாயமான விலையில் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். விவசாயிகள் உற்பத்தி செய்யும் பொருட்களுக்கு கட்டுப்படியான விலை கிடைக்க வேண்டும்.
அக்கறையின்மை
இந்தக் கோரிக்கைகள் அனைத்துமே மத்திய அரசால் செய்யக் கூடிய ஒன்றுதான். ஆனால் மத்திய அரசுக்கு விவசாயிகள் மீது அக்கறை இல்லை. குறிப்பாக தமிழக விவசாயிகள் மீது அக்கறை இல்லை. அதனால்தான் தமிழக விவசாயம் இந்த அளவிற்கு நொடிந்து போயிருக்கிறது. இதில் மத்திய அரசு உடனடியாக தலையிட்டு பிரச்சனை தீர்க்க வேண்டும் என்று டி. ராஜா கோரியுள்ளார்.