சொத்துக் குவிப்பு... லாலு பிரசாத் மகள் மிசா பாரதி எம்.பி வீட்டில் அமலாக்கத் துறை ரெய்டு
சொத்துக் குவிப்பு வழக்கு தொடர்பாக லாலுவின் மகள் மிசா பாரதியின் வீட்டில் அமலாக்கத் துறை சோதனை மேற்கொண்டு வருகிறது.
டெல்லி: வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக லாலுவின் மகளும், நாடாளுமன்ற உறுப்பினருமான மிசா பாரதியின் வீட்டில் அமலாக்கத் துறை சோதனை நடத்தி வருகின்றனர்.
மிஷாலி பாக்கர்ஸ் மற்றும் பிரிண்டர்ஸ் என்ற நிறுவனம் மிசா பாரதி, அவரது கணவர் சைலேஷ் குமார் ஆகியோருக்கு சொந்தமானது என்று கூறப்படுகிறது. டெல்லியில் பிஸ்வாசன் பகுதியில் உள்ள பண்ணை வீட்டை பினாமி பெயரிலோ அல்லது அடிமாட்டு விலைக்கோ வாங்கியதாக அமலாக்கத் துறை சந்தேகிக்கிறது.
மேலும் செயலற்றுக் கிடக்கும் இந்த நிறுவனத்தின் பேரில் மிசா பாரதி கடன் பெற்றுள்ளதாகவும் குற்றம்சாட்டப்பட்டு அவரிடம் அந்த நிறுவனம் குறித்து கடந்த மாதம் விசாரணை நடைபெற்றது. லாலுவின் குடும்ப உறுப்பினர்கள் 6 பேரும் சேர்ந்து பினாமி பெயரில் சொத்துக்களை குவித்ததாகவும் சந்தேகிக்கப்படுகிறது.
அதன்படி, டெல்லியில் மிசா பாரதிக்கு சொந்தமான 3 இடங்களில் அமலாக்கத் துறை அதிகாரிகள் இன்று சட்டவிரோத பணப்பரிவர்த்தனை வழக்கின் கீழ் சோதனை நடத்தி வருகின்றனர்.
ஹோட்டல்களுக்கு டெண்டர் விட்டதில் முறைகேடு தொடர்பாக லாலுவின் வீட்டில் நேற்று சிபிஐ சோதனை நடத்தியது குறிப்பிடத்தக்கது.