தலித் மாணவர் தற்கொலை பிரச்சினை விஸ்வரூபம்.. மத்திய அமைச்சர் தத்தாத்ரேயா பதவிக்கு ஆபத்து
டெல்லி: ஹைதரபாத்தில் தலித் மாணவர் தற்கொலை செய்துகொண்ட விவகாரத்தில், அமைச்சர், பண்டாரு தத்தாத்ரேயா பதவி விலக கோரிக்கைகள் வலுத்து வருகின்றன.
ஹைதராபாத்தில் மத்திய பல்கலைக்கழகம் செயல்பட்டு வருகிறது. இங்கு, கடந்த ஆகஸ்ட் மாதம், அம்பேத்கர் மாணவர் கூட்டமைப்பை சேர்ந்தவர்களுக்கும், பாஜவின் ஆதரவு பெற்ற அகில பாரதிய வித்யார்தி பரிஷத் (ஏபிவிபி) அமைப்பை சேர்ந்த மாணவர்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.
இதன் தொடர்ச்சியாக, பிஹெச்டி படித்து வந்த குண்டூரைச் சேர்ந்த ரோகித் வெமுலா (25) உட்பட 5 மாணவர்கள் கடந்த மாதம் இடைநீக்கம் செய்யப்பட்டனர். இவர்கள் அம்பேத்கர் மாணவர் கூட்டமைப்பை சேர்ந்தவர்களாகும்.
மாணவர்கள் போராட்டம்
இதை எதிர்த்து மாணவர்கள் கல்லூரி வளாகத்தில் போராட்டம் நடத்தி வந்தனர். இந்நிலையில், மாணவர் ரோகித் வெமுலா விடுதி அறையில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது மாணவர்கள் இடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.
போலீசாருக்கு அனுமதியில்லை
பல்வேறு அமைப்புகளை சேர்ந்த மாணவர்களும் போராட்டத்தில் குதித்துள்ளனர். ரோகித் தற்கொலைக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி ஆர்ப்பாட்டம் செய்து வருகிறார்கள். மேலும், ரோகித்தின் சடலம் கிடந்த அறையை பூட்டி, போலீசாரையும் உள்ளே அனுமதிக்கவில்லை.
மத்திய அமைச்சர் மீது கோபம்
மத்திய தொழிலாளர் நலத்துறை இணை அமைச்சரும், செகந்திராபாத் தொகுதி பாஜ எம்பியுமான பண்டாரு தத்தாத்ரேயா தூண்டுதலின் பேரில்தான் ரோகித் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மாணவர்கள் தரப்பில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. தத்தாத்ரேயா, மனித வள மேம்பாட்டு துறை அமைச்சகருக்கு கடிதம் எழுதிய பிறகுதான் ரோகித் சஸ்பெண்ட் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.
வழக்குகள்
சமூக வலைத்தளங்களிலும், தத்தாத்ரேயாவுக்கு எதிராக பல கருத்துக்கள் உலவி வருகின்றன. இதனிடையே தத்தாத்ரேயா மற்றும் பல்கலைக்கழக துணை வேந்தர் மீது போலீசார் வழக்குகள் பதிவு செய்துள்ளனர்.
வன்கொடுமை வழக்கு
இந்திய தண்டனை சட்டம் 306 (தற்கொலைக்கு தூண்டுதல்) மற்றும் எஸ்.சி/எஸ்.டி (வன்கொடுமை தடுப்பு சட்டம்) ஆகியவற்றின்கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. எனவே தத்தாத்ரேயாவை அமைச்சர் பதவியில் இருந்து நீக்க எதிர்க்கட்சிகள் போர்க்கொடி தூக்கியுள்ளன.