கேரளாவில் பயங்கரம்: தலித் மாணவி பலாத்காரம் செய்யப்பட்டு குடலை உருவி கொலை
கொச்சி: கேரளாவில் வீட்டில் தனியாக இருந்த சட்டம் படித்து வந்த 30 வயது தலித் மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு குடலை உருவி கொலை செய்யப்பட்டுள்ளார்.
டெல்லியில் ஓடும் பேருந்தில் 6 பேரால் பாலியல் பலாத்காரம் செய்து கொடூரமாக தாக்கப்பட்ட நிர்பயா போன்று கேரளாவிலும் ஒரு பெண்ணுக்கு கொடுமை நடந்துள்ளது. கேரள மாநிலம் கொச்சி அருகே உள்ள பெரும்பாவூரை சேர்ந்தவர் ஜிஷா(30). தலித் சமூகத்தை சேர்ந்த அவர் சட்டப்படிப்பு படித்து வந்துள்ளார்.
கடந்த 28ம் தேதி வெளியே சென்ற அவரது தாய் வீட்டிற்கு வந்து பார்த்தபோது அவர் ரத்த வெள்ளத்தில் பிணமாகக் கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். உடனே இது குறித்து போலீசாருக்கு தகவல் அளித்தார்.
போலீசார் விரைந்து வந்து ஜிஷாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஜிஷாவின் உடலில் 30 இடங்களில் வெட்டு இருந்தது. மேலும் அவரது குடல் உருவப்பட்டு வெளியே தொங்கிக் கொண்டிருந்தது.
அவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கூர்மையான ஆயுதத்தால் தாக்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். பிரேத பரிசோதனை அறிக்கை வந்தால் தான் முழு விபரம் தெரிய வரும் என்று அவர்கள் மேலும் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் இந்த சம்பவம் குறித்து அறிவியல் பூர்வமாக விசாரணை நடத்தி குற்றவாளிகளை பிடிக்குமாறு கேரள மாநில உள்துறை அமைச்சர் ரமேஷ் சென்னிதலா அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.