கசாப்பை காப்பாற்ற எவ்வளவோ முயற்சித்தோம்... முடியவில்லை...: வாக்குமூலத்தில் ஹெட்லி தகவல்
மும்பை: மும்பையைத் தாக்க ஏற்கனவே இரண்டு முறை முயற்சித்ததாகவும், ஆனால் அது தோல்வி அடைந்து விட்டதாகவும், மூன்றாம் முறையாக 2008ம் ஆண்டு நவம்பர் மாதம் 26ம் தேதி வெற்றிகரமாக தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் தனது வாக்குமூலத்தில் அதிர்ச்சித் தகவலைத் தெரிவித்துள்ளார் தீவிரவாதி ஹெட்லி.
மும்பையில், கடந்த 2008-ம் ஆண்டு நவம்பர் 26-ந் தேதி பாகிஸ்தான் தீவிரவாதிகள் 10 பேர் நடத்திய பயங்கரத் தாக்குதலில் 166 பேர் பலியானார்கள். 309 பேர் படுகாயம் அடைந்தனர். இந்தத் தாக்குதலில் லஸ்கர் இ தொய்பா தீவிரவாதி டேவிட் ஹெட்லிக்கும் தொடர்பு இருப்பதை போலீசார் கண்டறிந்தனர்.
பாகிஸ்தானில் பிறந்து அமெரிக்காவில் குடியேறிய டேவிட் ஹெட்லி, பின்னர் தீவிரவாத இயக்கத்தில் சேர்ந்துள்ளார். இந்நிலையில், ஒரு வழக்குத் தொடர்பாக டேவிட் ஹெட்லியை அமெரிக்கப் போலீசார் கைது செய்தனர். அந்த வழக்கில் அவருக்கு 35 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. தற்போது அவர் அமெரிக்கச் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் கடந்த டிசம்பர் மாதம், மும்பை போலீசாரின் மனுவைத் தொடர்ந்து அமெரிக்காவில் இருந்தபடி வீடியோ கான்பரன்சில் தனது குற்றத்தை ஒப்புக் கொண்டார் ஹெட்லி. அதன் தொடர்ச்சியாக இன்று மீண்டும் அங்கிருந்தபடியே வீடியோ கான்பரன்சிங் மூலம் வாக்குமூலம் அளித்துள்ளார் ஹெட்லி.
அதில், ஏற்கனவே இரண்டு முறை மும்பையைத் தாக்க திட்டமிட்டதாகவும், ஆனால் அவை வெற்றி பெறவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.
நவம்பர் முதல் வாரத்திலேயே இந்திய படகு ஒன்றைச் சிறை பிடித்து அதன் மூலம் மும்பையில் தாக்குதல் நடத்த அவர்கள் திட்டமிட்டுள்ளனர். ஆனால் அது நிறைவேறவில்லை. அதனைத் தொடர்ந்து மீண்டும் தாக்குதலுக்கு திட்டமிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், 2008ம் ஆண்டு நவம்பர் மாதம் 26ம் தேதி சாஜித் தனக்கு ஒரு எஸ்.எம்.எஸ். அனுப்பியதாகவும், அதில் டிவியைப் பார்க்க சொல்லி இருந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அதனைத் தொடர்ந்து டிவியை ஆன் செய்து பார்த்தபோது மும்பையில் தாக்குதல் நடந்து கொண்டிருந்தது தெரியவந்ததாக ஹெட்லி தனது வாக்குமூலத்தில் அவர் தெரிவித்துள்ளார்.
இந்த தாக்குதல் சம்பவத்திற்குப் பின்னர் ஷாஜித்தை சந்தித்துள்ளார் ஹெட்லி. அப்போது அவர், தீவிரவாதி கசாப்பை காப்பாற்ற எவ்வளவோ முயற்சித்ததாகவும், ஆனால் அது தோல்வியில் முடிந்து விட்டதாகவும் கூறியதாக ஹெட்லி தெரிவித்துள்ளார்.
2 முறை தாக்குதல் முயற்சி தோல்வி அடைந்ததால் இது இனி சரிப்பட்டு வராது என்ற முடிவுக்கு ஹெட்லி வந்துள்ளார். இதையடுத்து மிக்கிமவுஸ் என்று பெயரிடப்பட்ட டென்மார்க் தாக்குதல் தொடர்பான திட்டத்தில் தனது கவனத்தைத் திருப்பி விட்டாராம்.