தாவூத் பதுங்கியிருக்கும் இடமே எங்களுக்குத் தெரியாது: மத்திய அரசு அந்தர்பல்டி!!
டெல்லி: மும்பை தொடர் குண்டு வெடிப்பு சம்பவத்தின் முதல் குற்றவாளியான தாவூத் இப்ராஹிம் எங்கே பதுங்கி இருக்கிறார் எனத் தெரியவில்லை என்றும் இந்திய உளவுத்துறை கண்காணிப்பில் இருந்து அவர் தப்பிவிட்டதாகவும் லோக்சபாவில் உள்துறை இணை அமைச்சர் ஹரிபாய் பாரதிபாய் சவுத்ரி தெரிவித்துள்ளார். பாகிஸ்தானில் தான் தாவூத் பதுங்கி இருப்பதாக கூறிவந்த மத்திய அரசு திடீரென அவர் எங்கே இருக்கிறார் எனத் தெரியவில்லை என்று அறிவித்திருப்பது புதிய சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.
மும்பையில் 1993ஆம் ஆண்டு மார்ச் 12ந் தேதியன்று நிகழ்த்தப்பட்ட தொடர் குண்டுவெடிப்பில் 257 பேர் பலியாகினர். 700க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.
இந்த குண்டுவெடிப்பின் சூத்திரதாரியான நிழல் உலக தாதா தாவூத் இப்ராஹிம் இந்தியாவை விட்டு தப்பி ஓடி பாகிஸ்தானில் தஞ்சமடைந்தார். அதன் பின்னர் இந்தியாவிடம் சரணடைய விரும்பியதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில் மத்தியில் பிரதமர் மோடி தலைமையிலான அரசு அமைந்தது முதலே எப்படியும் தாவூத் இப்ராஹிமை இந்தியா கொண்டுவந்துவிடுவதற்கு தீவிர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.
பாகிஸ்தானின் கராச்சியில் அந்நாட்டு உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ. பாதுகாப்புடன் தாவூத் பதுங்கியிருப்பதாகவும் மத்திய அரசு கூறிவந்தது. இந்த நிலையில் லோக்சபாவில் இன்று கேள்வி ஒன்றுக்கு எழுத்துப்பூர்வமாக பதிலளித்த உள்துறை இணை அமைச்சர் ஹரிபாய் பாரதிபாய் சவுத்ரி, தாவூத் இப்ராஹிம் பதுங்கியிருக்கும் இடம் தெரியவில்லை. தாவூத் தற்போது இந்திய உளவுத்துறையின் கண்காணிப்பு வளையத்தில் இல்லை.
ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு கவுன்சில் அண்மையில் தாவூத் இப்ராஹிமுக்கு எதிராக நோட்டீஸ் பிறப்பிப்பித்துள்ளது. தாவூத்தின் இருப்பிடம் கண்டுபிடிக்கப்பட்ட பின்னர் நாடு கடத்துவது தொடர்பான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றார்.
இதுவரை பாகிஸ்தானில்தான் தாவூத் பதுங்கியிருப்பதாக மத்திய அரசு கூறிவந்த நிலையில் அந்தர்பல்டியாக தாவூத் இருப்பிடமே தெரியாது என கூறியிருப்பது புதிய சர்ச்சையை கிளப்பியுள்ளது.