தாவூத் சொத்துகளை பறிமுதல் செய்வதில் தொடரும் சட்டத் தடைகள் நீங்குவது எப்போது?
டெல்லி: இந்தியாவால் தேடப்படுகிற குற்றவாளி நிழல் உலக தாதா தாவூத் இப்ராஹிமின் சொத்துகளை பறிமுதல் செய்வதில் நீடிக்கும் சட்டத் தடைகளை முழுமையாக நீக்க நிதி அமைச்சகம் உளவுத்துறை மும்முரம் காட்டி வருகின்றன.
பாகிஸ்தானில் பதுங்கி இருக்கும் நிழல் உலக தாதா தாவூத் இப்ராஹிமின் பண பலத்தை குறைப்பதற்கான நடவடிக்கைகளை நிதி அமைச்சகம் மும்முரமாக மேற்கொண்டு வருகிறது. அண்மையில் கூட உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு ஒன்றில், மும்பையில் உள்ள அனைத்து தாவூத் இப்ராஹிம் சொத்துகளையும் பறிமுதல் செய்வதற்கான ஆலோசனைகளை நிதி அமைச்சகம் கோரியிருந்தது.
இங்கிலாந்தில் தாவூத் கும்பலானது, இக்பால் மிர்சி மூலம் ரூ2,500 கோடியை முதலீடு செய்திருப்பதை முடக்கவும் அமலாக்கப் பிரிவு நடவடிக்கை எடுக்கத் தொடங்கியது. இதனைத் தொடர்ந்தே உச்சநீதிமன்றத்தில் தாவூத்தின் அனைத்து சொத்துகளையும் முடக்கும் இந்நடவடிக்கையையும் நிதி அமைச்சகம் மேற்கொண்டு வருகிறது.
கடந்த 2 நாட்களுக்கு முன்பு ரஷ்யாவின் உஃபா நகரில் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் ஆகியோர் இடையேயான பேச்சுவார்த்தையில் தாவூத்தை ஒப்படைப்பது குறித்து எதுவும் இடம்பெறவில்லைதான். ஆனால் தாவூத் இப்ராஹிமின் பண பலத்தை முடக்குவதற்கான நடவடிக்கைகள் மும்முரமாக மேற்கொள்ளப்பட்டும் வருகின்றன.
மும்பையில் நாக்படா பகுதியில்தான் தாவூத் இப்ராஹிமின் ஏராளமான சொத்துகள் உள்ளன. 1993ஆம் ஆண்டு மும்பை தொடர் குண்டுவெடிப்பைத் தொடர்ந்து தாவூத் தலைமறைவானது முதலே இந்த சொத்துகள் சர்ச்சைக்குரியதாக இருந்துவருகிறது.
இந்த சொத்துகள் 1998ஆம் ஆண்டு முடக்கப்பட்டன. இதை எதிர்த்து தாவூத்தின் தாயாரும் சகோதரியும் டெல்லி உயர்நீதிமன்றத்தில் முறையிட்ட போதும் அவர்களது மனு தள்ளுபடியானது. இதன் பின்னர் இந்த வழக்கு உச்சநீதிமன்றத்துக்கும் போனது. அப்போது தாவூத் சொத்துகளை முடக்குவதை எதிர்க்கும் மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்யுமாறு நிதி அமைச்சகம் கோரியும் உள்ளது.
தற்போதைய நிலையில் தாவூத் இப்ராஹிமின் போதைப் பொருட்கள் மற்றும் ஆயுதக் கடத்தல் பாதைகள் முடக்கப்பட்டே உள்ளன. அதேபோல் அவனது அனைத்து சொத்துகளும் விரைவில் முடக்கப்பட்டு கையகப்படுத்தப்பட்டுவிடும்; அதற்கான சட்டத் தடைகள் நீங்கும் என்று நம்பிக்கையோடு இருக்கின்றனர் உளவுத்துறை, நிதி அமைச்சக அதிகாரிகள்.